புதிய எஸ்பிஎச் மீடியா நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கவிருக்கும் உத்தேச நிதி ஆதரவு குறித்தும் அந்நிறுவனத்தின் எழுத்துச் சுதந்திரம் குறித்தும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர் ஈஸ்வரன் தாக்கல் செய்து பேசிய அமைச்சர்நிலை அறிக்கையின் தொடர்பில், எஸ்பிஎச் நிறுவனத்திடமிருந்து பிரிந்து உத்தரவாத நிறுவனமாக உருவாகும் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதற்கு நிதி ஆதரவு வழங்க முன்வந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினருமான திரு சிங்.
புதிய எஸ்பிஎச் மீடியா நிறுவனத்துக்கு அரசாங்கம் எவ்வளவு நிதி ஆதரவு வழங்கும் என்ற விவரத்தை அமைச்சர் கூற வேண்டும் என்று வலியுறுத்தினார் திரு சிங்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "மரங்களில் கவனம் செலுத்தி, காடுகளை மறந்துவிடக்கூடாது" அல்லது இதன் மூலம் "அரசியல் லாபம் அடைய" முயற்சி செய்யக்கூடாது என்றார்.
புதிய ஊடக நிறுவனத்துக்கு அரசாங்கம் நிதி ஆதரவு வழங்கு வதன் மூலம் அதன் எழுத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு வந்துவிடாமல், எஸ்பிஎச் செய்தித்தாள்களில் எழுத்துச் சுதந்திர கலாசாரம் தொடர்ந்து கட்டிக்காக்கப்படுமா என்று திரு சிங் கேட்டார்.
புதிய எஸ்பிஎச் மீடியா நிறு வனத்துக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்யும்போது ஏன் சிறப்புக் குழுவை அமைக்க பரிசீலிக்கவில்லை என்றும் திரு சிங் தொடர்ந்து கேட்டார்.
"சிங்கப்பூரின் செய்தித்தாள் ஊடகத் துறையில் எழுத்துச் சுதந்திர கலாசாரம் பல்லாண்டுகளாக நீடித்து வந்துள்ளது. இதற்கு மாறாக இருப்பதாகக் கூறுவது பத்திரிகை யாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தீங்கு விளைவிப்பது போல் ஆகும்," என்றார் திரு ஈஸ்வரன்.
புதிய தலைவரைத் தேர்ந்து எடுக்க தேர்வுக் குழுவை அமைப்பது பற்றி கருத்துரைத்த அமைச்சர், "சிங்கப்பூரில் நியாயமான, சுதந்திரமான எழுத்துச் சுதந்திரம் நிலவுகிறது என்று மக்கள் பல்வேறு கருத்தாய்வுகள் மூலம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அச்சுப் பிரதி, மின்னிலக்கப் பிரதி என நமது செய்தித்தாள் ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மக்களின் அந்த நம்பிக்கையை வெற்றிபெற வைப்பது நமது பணியாகும்," என்றார்.
அப்போது மீண்டும் எழுந்து பேசிய திரு சிங், 1997ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வெளிவந்த தி நியூ பேப்பர் செய்தித் தாளின் ஒரு பக்கத்தைக் காட்டி, அதில் வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் ஒரு வழிகாட்டி அச்சிடப்பட்டது என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரன், தமது கருத்தை வலுவாக்க திரு சிங் 1997ஆம் ஆண்டில் வெளியான பத்திரிகை செய்தியை இப்போது உதாரணமாகக் காட்டுவது தமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். மேலும் தற்போதைய நிலையில் வெற்றிபெற்றுள்ள ஒரு மாதிரியைக் காட்டும்படியும் திரு சிங்குக்கு சவால் விடுத்தார்.