சிங்கப்பூரின் முதலாவது உள்ளூர் அஸ்தி சாம்பல் தோட்டம் மே 17 முதல் செயல்படும். ‘அமைதித் தோட்டம்’ என்று பெயரிடப்பட்டு உள்ள அந்தத் தோட்டம் 9,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அது சுவா சூ காங் இடு காட்டு வளாகத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளது.
சமய அமைப்புகளுடன், ஈமச்சடங்கு தொழில்துறை யுடன் பலவற்றையும் முழுமையாக கலந்து ஆலோசித்து இந்தத் தோட்டத்தைத் தேசிய சுற்றுப்புற வாரியம் உருவாக்கி இருக்கிறது.
பொதுமக்கள் அஸ்தியைத் தெளிக்க மேலும் ஒரு வாய்ப்பை இந்தத் தோட்டம் வழங்குகிறது.
சமயச் சார்பற்ற இந்தத் தோட்டம் நடந்து சென்று அஸ்தியைத் தெளிப்பதற்கான வசதிகளைக் கொண்டது. தோட்டத்தில் சமயச் சடங்குகளுக்கு அனுமதி இராது.
இருந்தாலும் தோட்டத்தின் வடக்குப் புற வாயிலுக்கு அருகே இருக்கும் வழிபாட்டு வசதியைப் பயன்படுத்திக் கொண்டு வருகையாளர்கள் எளிய முறையில் சடங்கு களைச் செய்யலாம். தோட்டத்தில் அஸ்தியைத் தெளிக்க விரும்புவோருக்குக் கட்டணம் $230.
இதுபோன்ற இரண்டாவது தோட்டம், 2022ல் மண்டாய் தகனச்சாலை வளாகத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.