சிறுவர்கள் இளம் பருவத்தில் கற்பது பசுமரத்தாணி போல அவர்களின் மனதில் அப்படியே பதிந்துவிடும்.
அதைக் கருத்தில்கொண்டு நல்ல குணங்களையும் உணர்வுகளையும் பாலர்களுக்கு கற்பிக்கும் வகையில் ‘கைன்ட்ஹீரோஸ் கிளப்’ (Kindheroes Club) ‘கனிவன்பு சவால் 2021’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியது.
‘கைன்ட்ஹீரோஸ் கிளப்’ இந்த நிகழ்ச்சியை தெலுக் பிளாங்கா பிளாக் 78Aல் இருக்கும் ‘பி.சி.எஃப் ஸ்பார்கல்டொட்ஸ்’ பாலர் பள்ளியுடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் நடத்தியது.
பல நடவடிக்கைகளை சுவாரசியமான முறையில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, கனிவன்பு, இன நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை உணர்த்த முற்பட்டது ‘கைன்ட்ஹீரோஸ் கிளப்’.
அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கத்தின் ‘கைண்ட்ரெட் ஸ்பிரிட்’ வட்டத்தில் ‘கனிவன்பு நாள் 2021’ அன்று திருமதி அனுப்பிரியா முத்துக்குமார், 35 இணைந்தார்.
‘கைன்ட்ஹீரோஸ் கிளப்’பின் நிறுவனரான இவர், “கனிவன்பினால் செய்யக்கூடிய சிறு சிறு செயல்கள் பாலர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தச் சவாலின் கருப்பொருள்.
பாலர்களின் கனிவன்பான செயல் சிறியதாக இருந்தாலும் அது பெரிய அளவில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை நாங்கள் காட்ட விரும்பினோம்,” என்று கூறினார்.
இந்த சவாலில் காலை வணக்கம் சொல்வது, உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்வது, பகிர்ந்துகொள்வது, உதவுவது, நலன் விசாரிப்பது, மற்றவர்களுக்காக கதவை பிடித்துக்கொள்வது, கூடுதல் வேலை செய்வது, கனிவான வார்த்தைகளை எழுதுவது,
மற்றவர்களை பாராட்டுவது போன்ற 12 எளிமையான கனிவன்பு பணிகளை குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
62 பாலர்கள் இந்த சவாலில் கலந்துகொண்டனர். இந்த பணிகளை பாலர்கள் செய்யும்போது, வீட்டில் அவர்களின் உரையாடல் இனிமையாகவும் மறக்க முடியாத ஓர் அனுபவமாகவும் இருந்தது என்றும் அந்த இயக்கத்தை தொடர்ந்து வீட்டில் கடைப்பிடித்து பாலர்களுக்கு பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்கப் போவதாகவும் பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மிஸ் ரேச்சல் ஓங், கனிவன்பு சவாலின் இறுதி நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற பாலர்கள் தாங்கள் வாங்கிய கோப்பைகளுடன் புகைப்படம் எடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
அத்துடன் விழாவில் கனிவன்பைப் பற்றி பாலர்கள் பேசியது இனிமையாக இருந்தது.
நான்கு வயது ஆக்னேய சுமேஷின் தந்தை திரு சுமேஷ் சுரேந்திரன், “மற்றவர்களிடமும் பொது இடங்களிலும் எவ்வாறு நடந்துகொள்வது, மக்களையும் சட்டத்தையும் எவ்வாறு மதிப்பது என்று எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறோம். ஆனால் மற்ற பெற்றோர் இதுபற்றி தங்கள் குழந்தைகளிடம் பேசுவது மிகவும் அரிது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மற்றவர்கள் மீது கருணை காட்டுவது, நாம் வாழும் சுற்றுச்சூழல் பற்றி அறிந்துகொள்வது பெற்றோருக்கும் சிறுவர்களுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
நாமும் வீட்டில் இதுபோன்று கனிவன்புடன் நடந்துகொண்டால் அது நம்மிடமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள் சிறுவர்களே!