கொவிட்-19க்கு எதிரான போரில் புதிதாக உருவாக்கப்பட்ட சுயபரிசோதனைக் கருவிகள் பயனுள்ளதாக விளங்கினாலும் கருவியின் பயன்பாட்டில் ஒரு சில அம்சங்கள் கவலைக்குரியதாக இருப்பதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.
சுயமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அதன் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படாமல் போகலாம். இதனால் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைத்துக் கூறப்படலாம்.
அரசாங்க சுகாதாரக் கட்டமைப்புகளில் இத்தகைய பரிசோதனை முறைகளை ஒருங்கிணைப்பது நல்லது என்று நிபுணர் ஒருவர் ஆலோசனை கூறினார்.
தென்கொரியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் ஏற்கெனவே இப்பரிசோதனைக் கருவி பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் கருவி இங்குள்ள மருந்தகங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் இப்பரிசோதனைக் கருவி பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங், 'பிசிஆர்' பரிசோதனை போன்று வேதனை தருவதாக இருக்காது என்று கூறினார்.
நிகழ்வுக்கு முன்னால் அதிகளவில் பயன்படுத்தப்படும் 'ஏஆர்டி' எனப்படும் ஏன்டிஜன் விரைவுப் பரிசோதனை முறை போன்று இந்த சுயபரிசோதனைக் கருவிகள் செயல்படும். சுமார் 30 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிவிக்கும் இக்கருவி, ஒன்றிரண்டு நாட்களில் முடிவைத் தெரிவிக்கும் 'பிசிஆர்' பரிசோதனை முறையைக் காட்டிலும் துல்லியத்தில் குறைவு.
இந்த சுயபரிசோதனைக் கருவிகள் வீட்டிலும் அவசர காரணத்துக்காக வெளியிலும் பயன்படுத்தப்படலாம் என்பதால் மிகப் பயனுள்ளவை என்றார் தொற்று நோய்கள் நிபுணர் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல், தொற்றுக்கான ஆசிய-பசிபிக் சங்கத்தின் தலைவருமான பால் தம்பையா.
இருப்பினும், தவறான முறையில் கருவிகள் பயன்படுத்தப்பட்டால் பொய்யான முடிவுகளே எஞ்சும் என்றார் தொற்று நோய்கள் மருத்துவர் டாக்டர் லிங் லி மின்.
இதன்படி, தொற்று இருந்தும் இல்லை என்று சிலர் நினைத்துக்கொள்ளலாம் என்றும் தங்களை அறியாமலே அவர்கள் பிறருக்குத் தொற்றைப் பரப்பலாம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், சுயபரிசோதனையில் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தாலும் அதைத் தெரியப்படுத்தாமல் இருப்பது ஆபத்து என்றார் பேராசிரியர் தம்பையா.
இத்தகைய சுயபரிசோதனைக் கருவிகளை மருந்தகங்களில் விற்கும்போது வாங்கியவரின் மருத்துவப் பதிவுகள் கொண்ட தேசிய சுகாதார கட்டமைப்பில் தகவலை ஒருங்கிணைக்கலாம் என்றார்.
இந்தியாவில் இதேபோன்ற சுயபரிசோதனைக் கருவி பயன்பாட்டில் உள்ளது. அதற்கான செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் அச்செயலியில் பதிவாகும். பின்னர் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய மன்றத்திற்கு அறிக்கை வழி பரிசோதனை முடிவு அனுப்பப்படும்.