கொவிட்-19 தடுப்பூசிகள் சிங்கப்பூரில் இதுவரை 3.7 மில்லியன் முறை போடப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்புச் சம்பவங்கள் 157 என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி தொடர்பில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ற சந்தேகத்திற்கு இடமிருந்தாலும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் உயிரிழப்புக்கும் தொடர்பேதும் கண்டறியப்படவில்லை என்றது ஆணையம்.
மே 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் போடப்பட்ட 'ஃபைசர்-பயோஎன்டெக்' மற்றும் 'மொடர்னா' தடுப்பூசிகளில் இந்தக் கடும் பாதிப்புச் சம்பவங்கள் 0.004% என்று கூறப்பட்டது.
தடுப்பூசி தொடர்பில் இந்தப்பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசிதான் காரணம் என்று கூறிவிட முடியாது.
இதுவரை கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர் அல்லது குணமடைந்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
கடுமை அல்லாத பாதிப்புகளையும் சேர்த்து ஆணையத்திற்கு 4,704 அறிக்கைகள் வந்துள்ளன. தோலில் அரிப்பே பெரும்பாலும் ஏற்பட்ட பாதிப்பாக இருந்தது.
இதையடுத்து சிலருக்குக் கண் இமை, முகம் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்பட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது.