சேஃப்என்ட்ரி வருகைப் பதிவுமுறை யுடனான கட்டடங்களில் இயங்கும் பேரங்காடிகளில் 'டிரேஸ்டுகெதர் மூலம் சேஃப்என்ட்ரி' 'சேஃப்என்ட்ரி கேட்வே' போன்றவை ஜூலை 21 முதல் மறுஅறிமுகம் காண்கின்றன.
'டிரேஸ்டுகெதர் மூலம் சேஃப் என்ட்ரி' பதிவுமுறையைக் கொண்டிருக்கும் கட்டடங்களில் இயங்கும் பேரங்காடிகளில் இவை அவசியம் என்று கொவிட்-19க்கான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று தெரிவித்தது.
மேலும் பேரங்காடிகளும் கட்டடங்களும் ஒரேநேரத்தில் திறக்கப்பட்டு மூடப்படும் சூழ்நிலைகளுக்கும் இது பொருந்தும்.
பேரங்காடிகளில் திரளும் கூட்டம் கொவிட்-19 பரவலை அதிகப் படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
நோய் தொற்றியோருடன் தனிப்பட்டவர்கள் கட்டடங்களின் உள்ளே ஒன்றுகலக்கும் நேரங்களில் தொடர்புத் தடங்களை அறிய சேஃப் என்ட்ரி வருகைப் பதிவு ஏற்பாடு கள் உதவும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
'சேஃப்என்ட்ரி கேட்வே' என்பது வேகமாகவும் தடையற்ற முறையிலும் கட்டங்களில் உள்நுழையும் வசதியைத் தருகிறது.
டிரேஸ்டுகெதர் சாதனம் அல்லது டிரேஸ்டுகெதர் கைபேசிச் செயலியை இந்த கேட்வே அருகில் காண்பித்தால் போதுமானது, உள்ளே நுழைவதற்கான பதிவு கிைடத்துவிடும்.
மற்ற கட்டடங்களுக்குள் இடம்பெறாமல் தனியாக இயங்கும் பேரங்காடிகள் ஏற்கெனவே 'டிரேஸ்டுகெதர் மூலம் சேஃப்என்ட்ரி' என்னும் வருகைப் பதிவுமுறையையும் 'சேஃப்என்ட்ரி கேட்வே' நுழைவுமுறையையும் அமல்படுத்தி இருந்தால் அவற்றை அவை தொடரலாம்.
"சேஃப்என்ட்ரி பதிவுமுறை தொடர்பான விதிகளுக்கு இணங்கி நடந்துகொள்ளவும் டிரேஸ்டுகெதர் சாதனம் அல்லது கைபேசியைப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்களையும் தங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க இது உதவும்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

