லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சிலிகி சாலை, ரோச்சர் கேனல் சாலைச் சந்திப்பில் டாக்சியும் காரும் இன்று (ஜூலை 10) அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் அவற்றின் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அதிகாலை 2.50 மணியளவில் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது விபத்தில் ஈடுபட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் இருவரும் வாகனத்துக்கு வெளியே சுயநினைவுடன் இருந்தனர்.
டாக்சியின் பின் இருக்கைகளில் சிக்கிக்கொண்ட இரு பெண் பயணிகளை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் இரும்புக் கருவிகளைக் கொண்டு மீட்டனர்.
டாக்சிக்குள் சிக்கியிருந்த 41, 47 வயதான அந்தப் பயணிகளை மீட்க குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் டாக்சியின் முன் கண்ணாடியையும் அதன் மேற்கூரையையும் வெட்டி எடுக்க வேண்டியிருந்தது.
காயமடைந்த நால்வரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.