இந்து இளங்கோவன்
மனிதச் செயல்பாடுகளால் அதிகம் பாதிப்படைகின்ற இடங்களில் கடலும் ஒன்று. உலகின் எந்த மூலையில் தூக்கி வீசப்படும் கழிவும் கடைசியில் சென்று சேருகின்ற இடம் கடல்தான்.
இதை எடுத்துரைக்கிறது நெட்ஃபிளிக்ஸ் செயலியில் இடம்பெற்றுள்ள 'சீஸிபிரசி' எனும் பிரபல ஆவணப்படம். இதைப் பார்த்து தமக்கு ஏற்பட்ட மனவேதனையால் மீன் வகைகளை உண்ணுவதை நிறுத்திக் கொண்டார் 22 வயது காயத்திரி காந்தி.
கடலில் பெருகும் பிளாஸ்டிக் கழிவுகள், அளவுக்கு அதிகமான மீன் பிடித்தல் போன்ற வழிகளில் கடல் உயிரினங்களுக்கு மனிதர்கள் செய்யும் கேடுகளை 'சீஸிபிரசி' ('Seaspiracy") ஆவணப்படம் ஆராய்கிறது.
அத்துடன், கடல்சார் சுற்றுச் சூழல் அழிவின் முக்கிய காரணம் பெருவணிக மீன்பிடிப்புத் தொழில் தான் எனும் வாதத்தை முன்வைத்து மீன் உண்ணும் பழக்கத்தைக் ைகவிடுமாறு அது ஊக்குவிக்கிறது.
அந்த ஆவணத் தொடர்தான் ஒரு புகைப்படத் தொடரை உருவாக்க காயத்திரிக்கு தூண்டு கோலாக அமைந்தது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுத் துறையில் பயின்றுவரும் காயத்திரி இந்த பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை சிங்கப்பூரர்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தமது நண்பர் ஹம்சவள்ளி துரைராஜுவுடன் இணைந்து ஒரு புகைப்படத் தொடரை உருவாக்கியுள்ளார். மனிதர்களின் செயல்களால் கடல் உயிரினங்கள் படும் வேதனையைச் சித்திரிக்கின்றன இந்தப் புகைப்படங்கள். புகைப்படங்களில் பிளாஸ்டிக் குப்பைகளில் சிக்கித் தவிக்கும் உயிரினமாகக் காட்சி அளிக்கிறார் காயத்திரி.
"பெருங்கடல்கள் நமது பூமியின் உயிர்நாடி. பூமியின் பருவநிலையை சீராக்க அவை உதவுகின்றன. நாம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பாதிப்பு பல்லாண்டுகள் நீடிக்கும். கடலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கில் மீன்பிடி வலைகள் 10% ஆகும். அவை எண்ணற்ற மீன்கள், கடல் உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகின்றன.
"மனிதர்களுக்கு இவ்வாறு நடந்தால் நாம் எத்தகைய வலியை உணருவோமோ அதுபோலத்தான் கடல் உயிரினங்களுக்கும் எனும் கருத்தை எங்களது புகைப்படங்கள் மூலம் சித்திரிக்க முயன்றுள்ளோம்," என்றார் காயத்திரி.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் போன்ற அடிப்படைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தகவல்களுக்கு அப்பாற்பட்டு, கடல் உயிரினங்களை அளவுக்கு அதிகமாகப் பிடிப்பதாலும் உட்கொள்வதாலும் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருது கிறார் காயத்திரி.
தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்திவரும் கயாத்திரி, புகைப்பட, காணொளி தொகுப்பாக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். தொடர்ந்து தமது திறன்களை பயனுள்ள வழிகளில் வெளிப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
புகைப்படங்களை எடுத்தவர் புகைப்படக் கலைஞர் ஹம்சவள்ளி துரைராஜு, 26. புகைப்படங்களின் வழி காட்சிகளை உருவாக்கி அதன் மூலம் கதைசொல்வதே இவரின் தனித்துவம். 13 வயதிலிருந்தே புகைப்படக் கலையில் ஆர்வம் செலுத்திவரும் இவரின் புகைப்படப் படைப்புகள் யாவும் பெண்களை மையமாக கொண்டவை.
இந்தப் புகைபடப் பிடிப்பிற்குத் தயார் செய்ய, கடல் உயிரினப் பிரச்சினையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்த பின்னரே புகைப்படங்களை எடுத்ததாகக் கூறினார் ஹம்சவள்ளி.
"எனது புகைப்படக் காட்சிகள், பார்ப்போரின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் மிக இயல்பாகவும் தத்ரூபமாகவும் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும் என்பது எனது எண்ணம்.
"கடல் உயிரின அழிவைப் பற்றி காயத்திரியுடன் உரையாடும்போது நான் பலமுறை சென்றிருந்த ஒரு குறிப்பிட்ட இடம் நினைவிற்கு வந்தது. இந்தக் குறிப்பிட்ட இடத்திலே நான் நடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் நான் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் உணர்ந்த தருணங்கள் நினைவில் நிற்கின்றன. அங்கே அலைகள் கரையை தொடும் பகுதியில் எண்ணெய் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து என்னுள் குற்ற உணர்வு ஏற்பட்டது. பல நேரங்களில் நம்முடைய செயல்கள் பிற உயிரினங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் அறிந்திருப்பதில்லை," என்றார் ஹம்சவள்ளி.
புகைப்படங்களைக் காண தமிழ் முரசின் இன்ஸ்டகிராம் பக்கத்தை நாடுங்கள்.