நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியில் தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகால பட்டயக் கல்வி பயின்றுவரும் சபின் சாரா, 22, இவ்வாண்டின் வாசிப்பு விழாவில் தொடர்ந்து நான்கு நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற பின்னர் தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் தம்முள் வளர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.
விழாவின் முதல் வாரத்தில் சிறப்பு எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் தலைமை உரையைக் கேட்ட பின்னர், உடனடியாக அவர் எழுதிய 'மெய்நிகரி' நூலை இரவல் பெற்று வாசிக்க ஆர்வம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
சபின் போன்றே பல இளையர்கள் இவ்வாண்டு வாசிப்பு விழாவில் பங்கேற்பாளர்களாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இளைய சிங்கப்பூரர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு வாசிப்பு விழாவில் பல மெய்நிகர், நேரடி நிகழ்ச்சிகள் அரங்கேறின.
கடந்த 18-ஆம் தேதி ஞாயிறு அன்று தேசிய நூலக வாரியத்தில் வாசிப்பு விழாவின் இறுதி தமிழ் நிகழ்வான, 'சிறுகதையிலிருந்து திரைக்கதை, வசனம் உருவாக்குதல்' எனும் பயிலரங்கு நடைபெற்றது.
உள்ளூர் மேடை நாடகவிய லாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு சலீம் ஹாடி அதனை வழி நடத்தினார்.
அந்த நேரடி நிகழ்வில் ஒரு சிறுகதையைத் திரைக்கதையாகவும் வசனமாகவும் வடிவமைத்து எழுதுவதன் அடிப்படைக் குறிப்புகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
மொத்தம் 24 இளையர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மறைந்த எழுத்தாளரர் சுஜாதாவின் 'நகரம்' சிறுகதை, புகழ்பெற்ற எழுத்தாளரான ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஆகியவற்றை மையப்படுத்தி பயிலரங்கு நடத்தப்பட்டது.
இளையர்கள் சிறுகதைகளைப் படித்தபின் அவர்களது புரிதலுக்கு ஏற்ப காட்சிகளையும் பின்னர் கதாப்பாத்திரங்களுக்கான வசனங்களையும் உருவாக்கினர்.
"இளையர்கள் நிறைய புத்தகங்கள் படித்தால்தான் அவர்களது கற்பனைத் திறன் வளரும். இளம் வயதில் போதிய அனுபவங்கள் இல்லாவிடிலும் படித்த புத்தகங்
களிலிருந்து உள்வாங்கிக் கொண்ட கருத்துகளைத் தூண்டுகோலாகக் கொண்டு தங்கள் படைப்புகளை அவர்கள் உருவாக்கலாம்.
"புத்தகங்கள் வழி எழுத்தாளரின் பார்வையில் கதாபாத்திரங் களின் இயல்பைப் புரிந்துகொள்ளமுடியும்," என்றார் திரு சலீம்.
புத்தக வடிவில் பெறும் வேறொருவரின் சிந்தனைகள், கற்பனை களை ஆகியவற்றை நம்முள் கொட்டிக் கிடக்கும் சிந்தனைகளுடன் கலந்து எவ்வாறு தனித்துவமான திரைக்கதையை உருவாக்குவது என்பதை உணர்ந்துகொண்டதாக கூறிய பிரகாஷ், 21, தாமும் கூடிய விரைவில் ஒரு குறும்படத்தை எடுக்க ஊக்கம் பெற்றிருப்பதாகச் சொன்னார்.
வாசிப்பு விழாவில் தாம் கலந்துகொண்ட மற்ற நிகழ்வுகளை காட்டிலும் சற்று வித்தியாசமாக திரைக்கதை உருவாக்கத்தை மையமாக கொண்டிருந்த காரணத்தால் இந்நிகழ்வு தம்மைக் கவர்ந்ததாக இவர் கூறினார்.
பயிலரங்கில் கலந்துகொண்ட மற்றொருவரான மீனாஸ்ரீ
சிவகுமார், 19 சில குறும்படங்களை எழுதி தயாராக வைத்துள்ளார்.
"சிறுகதைகளை வேறு வடிவத்தில் மாற்றி அமைத்து நல்ல திரைக் கதையுடன் திரைப்படங்களாகத் தயாரிக்கலாம் என்பதை இந்நிகழ்வின் வழி தெரிந்துகொண்டேன்,
"மெய்நிகரி நாவலிலிருந்துதான் 'கவண்' திரைப்படம் உருவானது என்பது எனக்கு இதற்கு முன்பு தெரியாது. ஏற்கெனவே வெளிவந்துள்ள சிறுகதையை மீண்டும் படமாக்குவதில் சுவாரசியம் இல்லை என்று நினைத்தேன்.
"ஆனால் கூடிய விரைவில் ஒரு சிறுகதையைக் கருவாகக் கொண்டு குறும்படத்தை தயாரிக்க ஆர்வம் பிறந்துள்ளது," என்றார் அவர்.
அத்துடன் சிங்கப்பூரில் நிறைய சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளது வாசிப்பு விழாவின் மூலம்தான் தமக்குத் தெரியவந்ததாகக் கூறினார் மீனாஸ்ரீ.
- செய்தி: இந்து இளங்கோவன்