அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வரும் நிலையில் நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.
பெருந்தொற்றுச் சூழலில் ‘டெல்டா’ வகைக் கிருமியின் உடனடி தாக்கத்தை அண்டை நாடுகளும் இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளும் சமாளிக்க உதவுவது, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் ஆகியவற்றை அமைச்சர் பட்டியலிட்டார். இவ்வார இறுதியில் இடம் பெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் ஹாரிஸின் வருகைக்கு முன்னோட்டமாக டாக்டர் விவியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமெரிக்காவும் சிங்கப்பூரும் 55 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அத்தொடர்பை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்ற தமிழ் முரசின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மின்னிலக்கப் பொருளியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் இணக்கம் கண்டுள்ள நிலையில் இந்த வளர்ந்துவரும் கட்டமைப்பில் அமெரிக்கா எவ்வாறு அங்கம் வகிக்க முடியும் என்பது குறித்து ஆராயப்படும் என்றார் அமைச்சர். பருவநிலை மாற்றம் மிகுந்த அக்கறைக்குரிய அம்சமாக உள்ளதால் பசுமைப் பொருளியல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் பசுமையான, நீடித்த நிலைத்தன்மையான பொருளியலுக்குத் துரிதமாக மாறுவதற்கு செல்ல உலகளாவிய திட்டங்கள் உட்பட வாய்ப்புகள் ஆராயப்படும்.
மின்னிலக்கப் பொருளியலின் வளர்ச்சியால் இணையப் பாதுகாப்பு மேலும் அவசியமாகிறது. அந்த அம்சத்திலும் மேலும் இணக்கம் காண விரும்புவதாக டாக்டர் விவியன் சொன்னார்.
அமெரிக்கத் துணை அதிபராகப் பொறுப்பேற்றபின் அமெரிக்கக் கண்டத்துக்கு அப்பால் தமது முதல் அதிகாரபூர்வ வெளியுறவுப் பயணத்தின் முதல் இடமாக சிங்கப்பூருக்கு இம்மாதம் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வருகைத் தர இருக்கிறார் கமலா ஹாரிஸ்.
சிங்கப்பூர், வியட்னாம் இரு நாடுகளுக்கும் வருகைத் தரும் அவர், வியட்னம் நாட்டிற்குப் பயணம் செய்யும் முதல் அமெரிக்கத் துணை அதிபர் எனும் சிறப்பையும் பெறுகிறார். சிங்கப்பூர் அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பறைசாற்றும் விதமாக அவரது வருகை அமைகிறது. இரு நாடுகளும் பொருளியல், தற்காப்பு, மக்கள் தொடர்பு அம்சங்களில் ஆழமான, விரிவான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
இரு நாட்டுத் தலைவர்களின் உயர்மட்ட சந்திப்புகள் அதிக எண்ணிக்கையில் நடந்துவந்துள்ளன. அமெரிக்கா முதல் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொண்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.
கடந்த 2004ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே நடப்பிற்கு வந்த அந்த உடன்பாட்டால் பொருள், சேவை வர்த்தகம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் அமெரிக்கா. மொத்தம் 5,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன.