மகாபாரத இதிகாசத்தை மையமாகக் கொண்டு மேடைநாடகங் களைப் படைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெயர்பெற்றுள்ள அவாண்ட் நாடகக்குழு, ஐந்தாவது முறையாக ஒரு மகாபாரதக் கதாப்பாத்திரத்தைச் சுற்றி நாடகத்தைப் மேடையேற்றவுள்ளது.
அவாண்ட் நாடகக் குழுவின் 20ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ‘அபிமன்யு’ என்ற படைப்பு வரும் செப்டம்பர் 3,4 ஆம் தேதிகள் மேடையேற்றப்படும்.
திரு க. செல்வா இயக்கத்திலும் முனைவர் இளவழகன் முருகன் எழுத்திலும் உருவாகியுள்ள இந்நாடகத்தில் மொத்தம் 18 கதாப்பாத்திரங்கள் உள்ளன. அபிமன்யு தான் மையக் கதாபாத்திரம்.
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன்தான் அபிமன்யு.
இதிகாசத்தில் இடம்பெறும் குருச்சேத்திரப் போரில் கௌரவர்களை எதிர்த்து பாண்டவர்கள் 18 நாட்களாக போரிடுவார்கள். 13ஆம் நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் என்ற போர் உத்தியை அமைப்பார்கள். அந்த அமைப்பினுள் ஊடுருவிச் செல்லத் தெரிந்த மிகச்சிலரில் இளம் வீரர் அபிமன்யுவும் ஒருவர். ஆனால் அவருக்கு அதி லிருந்து மீண்டு வெளிவர தெரியாது.
இறுதியில் கவுரவப் படையின் முக்கிய வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து அவரை எதிர்த்துப் போர்புரிய, அபிமன்யுவும் மரணத்தைத் தழுவுவார்.
“அபிமன்யுவின் மரணத்துக்குப் பின்னர் அவரது பெற்றோர், கிருஷ்ணன், திரௌபதி, கர்ணன் போன்ற கதாபாத்திரங்களின் மனநிலை, அவர்களது கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை நாடகத்தில் சித்திரிக்கிறோம்,” என்றார் நாடகத்தின் துணை இயக்குநரான ஸ்ரீகணேஷ் லக்ஷ்மிநாராயணன்,
அபிமன்யு கதாபாத்திரத்தில் வீரம், அன்பு, பாசம், விவேகம் போன்ற நற்பண்புகள் சித்திரிக்கப் படுவதால் அப்பாத்திரம் மையப் படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், போர் ஆயுதங்கள், நடிகர்களின் ஆடைகள், மேடை அலங்காரம் அனைத்தும் தத்ரூபமாகக் காட்சி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மூப்பரிமாண வரைகலை, காணொளிகள் போன்ற பல தொழில்நுட்பக் கூறுகளும் மேடை நாடகத்தில் இடம்பெறும் என்று மேலும் சொன்னார் 54 வயது திரு ஸ்ரீகணேஷ்.
அவாண்ட் நாடகக் குழுவுடன் இதுவரை நான்கு படைப்புகளில் இணைந்து பணிபுரிந்த திரு ஜே அஷிஷ், அபிமன்யு கதாப்பாத்திரத்தில் நடிப்பார்.
“முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடிக்கிறேன். பல கோணங்களிலிருந்து அபிமன்யுவைப் பற்றி ஆராய இந்த நாடகம் வாய்ப்பளித்துள்ளது. அபிமன்யு ஒரு மேடை நாடகம் என்று மட்டும் சொல்வதை விட நேரடி இசை, முப்பரிமாண காட்சிகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி எனலாம்,” என்றார் திரு அஷிஷ், 23.
ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் அமைந்திருக்கும் கேட்வே அரங்கத்தில் நாடகம் இடம்பெறும்.
செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 7.30 மணி, செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3 மணி, மாலை 7.30 மணி என்று மொத்தம் மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கொவிட்-19 கட்டுபாடுகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக 250 பேர் கலந்துகொள்ளலாம்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்துகொள்ள நிகழ்ச்சி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அரங்கத்திற்கு வருமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கிறது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு இப்பரிசோதனை தேவையில்லை.
நுழைவுச்சீட்டுகளின் விலை $28 முதல் $32 வரை ஆகும்.
மாணவர்கள், முழு நேர தேசிய சேவையாளர்கள், வேலை அனுமதி சீட்டு உள்ள ஊழியர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு சலுகை விலையில் $20 (கையாளுகை கட்டணமான $2 தவிர) நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும்.
நுழைவுச்சீட்டுகளை www.sistic.com.sg/events/abimanyu0921 என்ற இணையத்தளத்தில் பெறலாம்.