தங்களை கொவிட்-19 தொற்றி, அதன்மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கும் அதனைப் பரப்பிவிடுவோமோ என்று பீஷான் பேருந்துச் சந்திப்பு நிலையத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்களும் முகப்பு ஊழியர்களும் கவலைப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் தெரிவித்து இருக்கிறார்.
தனிமை உத்தரவின்கீழ் தாங்கள் வைக்கப்பட்டால் தங்களது அன்றாடப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுமோ என்பது பற்றி ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதாகவும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக திரு யோங் கூறியுள்ளார்.
மற்ற சிலர், தங்களது பணி அட்டவணையில் செய்யப்படும் தொடர் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர்.
பீஷான் பேருந்துச் சந்திப்பு நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்த திரு யோங், "பேருந்து ஓட்டுநர் ஒருவரைக் கிருமி தொற்றியதை அடுத்து, வேறொரு தங்குமிடத்தைத் தேடிக்கொள்ளுமாறு வீட்டு உரிமையாளர் அவரிடம் கூறியதாக எனக்குத் தெரியப் படுத்தப்பட்டது. தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தினர் மேற்கொண்ட உடனடி ஏற்பாடுகளின் பலனாக அவருக்கு புதிய தங்குமிடம் தேடித் தரப்பட்டது," என்று சொன்னார்.