தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தனிமை உத்தரவின்றி சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கும் முன்னோடி பயணத் திட்டம் ஒன்று திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான வழித்தடத்தின்கீழ், முதல் விமானமான SQ325 ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகரிலிருந்து இன்று உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, சாங்கி விமான நிலையத்தில் நாளை மாலை 4.25 மணிக்கு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு நாடுகளிலிருந்து புறப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தனிமை உத்தரவுக்குப் பதிலாக நான்கு கொவிட்-19 ‘பிசிஆர்’ பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
மேலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் நடக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான வழித்தடத்தின்கீழ் இயங்கும் விமானங்களில் அவர்கள் பயணம் செய்ய வேண்டும்.
தொடக்கமாக, புருணை மற்றும் ஜெர்மனியிலிருந்து வருவோருக்காக, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான வழித்தடத்தை சிங்கப்பூர் தன்னிச்சையாக திறந்துவிட்டுள்ளது.
புருணை, உல்லாசப் பயணங்களுக்காக தொடர்ந்து தனது எல்லைகளை மூடியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்காக ஜெர்மனி தனது எல்லையைத் திறந்துவிட்டுள்ளது. இதனால், சிங்கப்பூர் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான வழித்தடத்தைப் பயன்படுத்தி தனிமை உத்தரவின்றி ஜெர்மனி சென்று வரலாம்.