கடந்த பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் மலேசியப் பொறியாளரான பார்த்திபன் முனுசாமி, 35, எல்லைகள் மூடப்படுமுன் ஒவ்வொரு வார இறுதியிலும் ஜோகூர் பாருவில் வசிக்கும் தம் பெற்றோரைப் பார்க்கச் சென்றுவிடுவார்.
இந்நிலையில், சென்ற ஈராண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்திருப்பது மிகுந்த கவலையைத் தருவதாக திரு பார்த்திபன் கூறினார். அதிலும் தம் அக்காள் மகளின் திருமணத்திற்குச் செல்லமுடியாதது பெரிய ஏமாற்றம் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் மூடப்பட்டன. இதனால் பார்த்திபனைப் போன்ற சிங்கப்பூரில் வசிக்கும் பல நூறாயிரம் மலேசியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.
அவர்களின் வாட்டத்தைப் போக்கி, மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், ‘காஸ்வே எக்ஸ்சேஞ்ச்’ விழா பிரபல நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளது. இதனைக் கட்டணமின்றிக் கண்டுகளிக்கலாம்.
இம்மாதம் 18ஆம் தேதி இணையம் வழியாக நடக்கவிருக்கும் ‘லெட்ஸ் லாஃப் மலேசியா’ என்ற இந்நிகழ்ச்சியில் பிரபல மலேசிய நகைச்சுவைக் கலைஞர்கள் கஜன், பிரகாஷ் டேனியல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிங்கப்பூர்-மலேசியா இடையே கலையையும் கலாசாரத்தையும் பரிமாறிக்கொள்ளும் விதமாக 2020 முதல் ஆண்டுதோறும் ‘காஸ்வே எக்ஸ்சேஞ்ச்’ கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
“கவலைகளை மறக்க சிரிப்புதான் சிறந்த வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன். நானும் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு மலேசியர்தான். உறவுகளைவிட்டு, நாடு கடந்து சிங்கப்பூர் வந்து உழைக்கும் மலேசியர்களை ஒன்றிணைத்து, சக மலேசியர்களுடன் தாம் விட்டு வந்தவற்றைக் கொண்டாட ஒரு தளமாக இந்நிகழ்ச்சி அமையும்.” என்றார் ‘லெட்ஸ் லாஃப் மலேசியா’ நிகழ்ச்சியின் இயக்குநர் திரு ஷான் லூர்துசாமி.
வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காண இங்கு பதிவுசெய்யலாம்: https://llm2021.peatix.com