சிங்கப்பூரின் தேசிய கிரிக்கெட் வீரர் ஜனாக் பிரகாஷ் தற்போது புதியதொரு மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் மலேசியாவில் கிரிக்கெட் ஆட வந்த அழைப்பைப் பெற்று முதன்முறையாக மகிழ்ந்தபோது ஜனாக்கின் வயது 16. தற்போது அதேபோன்றதொரு இன்ப அதிர்ச்சி அவருக்கு.
நேப்பாளத்தின் எவரெஸ்ட் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பங்கேற்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் லீக் ஆட்டம் ஒன்றில் பங்கேற்க இருக்கும் முதல் சிங்கப்பூர் வீரர் என்னும் பெருமையைப் பெறுகிறார் தற்போது 21 வயதாகும் ஜனாக்.
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை நடைபெற இருக்கும் நேப்பாள லீக் கிரிக்கெட் போட்டியில் ஆறு அணிகள் மோதுகின்றன. அதில் ஒன்றான காத்மாண்டு கிங்ஸ் லெவன் அணியில் இணைகிறார் ஜனாக்.
“நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்ததும் வியந்துபோனேன். இருப்பினும் இப்படி ஒரு வாய்ப்பைப் பெறுவதற்காக நான் கடினமாக உழைத்திருக்கிறேன்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
"அனைத்துலக அளவில் ஏராளமான அனுபவ வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் நானும் பங்கேற்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் ஜனாக்.
20 ஓவர்களைக் கொண்ட பிரிமியர் லீக் ஆட்டங்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பிரபலம். 2016 முதல் நேப்பாளமும் அத்தகைய போட்டியை ஏற்று நடத்தி வருகிறது.