இம்மாதம் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 20 இல்லத் தடுப்பூசிக் குழுக்கள், நடமாடுவதில் சிரமத்தை எதிர்கொள்வோரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டன. அந்தக் குழுக்களில் மருத்துவ அதிகாரிகளும் மூன்றாவது போர்க்கால ஆதரவு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்களும் இடம்பெற்றனர். அந்த 20 இல்லத் தடுப்பூசிக் குழுக்களும் மூன்று நாட்களில் ஏறத்தாழ 480 பேருக்குத் தடுப்பூசி போட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
"என் வீட்டிற்கு ஆயுதப்படை அதிகாரிகள் வந்து என் கணவருக்குத் தடுப்பூசி போடுவர் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தாதியர் அல்லது சாதாரண உடையில் இருப்பவர்கள் வருவர் என்று நினைத்தேன்," என்று ஒய்வுபெற்ற 78 வயது கேத்தரின் டான் தெரிவித்தார்.
"தடுப்பூசி போட்டுக்கொள் வோரின் எண்ணிக்கையை உயர்த்த அரசாங்கம் அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது," என்று மூன்றாவது போர்க்கால ஆதரவு மருத்துவமனைக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான மேஜர்(தேசிய சேவை) டாக்டர் மிசான் மரிகான் கூறினார்.
கடந்த மாதத் தொடக்கத்தில் 33 இல்லத் தடுப்பூசிக் குழுக்கள் இருந்தன. அவற்றில் நான்கு
ஆயுதப்படையைச் சேர்ந்தவை.
கடந்த வாரம் 49 இல்லத் தடுப்பூசிக் குழுக்கள் இருந்தன. அவற்றில் 20 ஆயுதப்படையைச் சேர்தவை. தொடர்ந்து உதவி தேவைப்பட்டால் அதுகுறித்து ஆயுதப் படையிடம் தெரிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
இம்மாத இறுதிக்குள் இல்லத் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. சில இல்லத் தடுப்பூசிக் குழுக்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டு வருகின்றன.
கடந்த வாரத்திலிருந்து தாதிமை இல்லங்களில் தங்குவோருக்குத் தமது குழுக்கள் பூஸ்டர் தடுப்பூசி களைப் போட்டு வருவதாக எட்ஜ்டேல் மருந்தகத்தின் இயக்குநர் டாக்டர் யான் ஷி யுவேன் தெரிவித்தார்.
"இல்லத் தடுப்பூசி சேவைகளுக்கான தேவை இருக்கும்வரை அதை வழங்க ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புச் சேவைகளுக்கான முகவையுடன் இணைந்து செயல்படுவோம்," என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஒரு வாரமாக நீ சூன் முகாமில் உள்ள மூன்றாவது போர்க் கால ஆதரவு மருத்துவமனையைச் சேர்ந்த ஆதரவு அதிகாரிகளுடன் 20 ஆயுதப் படைக் குழுக்கள் இணைந்து செயல்பட்டன.
நோயாளிகளுடன் தொடர்புகொள்ளவும் குழுக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும்
ஆதரவு அதிகாரிகள் உதவினர்.