மனநலம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கலந்துரையாடல்களை நடத்தவும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் வான் சக்காரியா தலைமை தாங்கு கிறார்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 452 பேர் உயிரை மாய்த்துக்கொண்டதாக லாப நோக்கமற்ற அமைப்பான சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை மனநல விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டில் உயிரை
மாய்த்துக்கொண்டோர் எண்ணிக்கை ஆக அதிகமாகப் பதிவானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, உயிரை மாய்த்துக்கொண்டோர் விகிதம் கடந்த ஆண்டு 13 விழுக்காடு அதிகரித்தது.
#452TooMany என்று பெயரிடப்பட்டுள்ள இயக்கம், உதவி நாடும்படி உதவி தேவைப்படுவோரை ஊக்குவிக்கிறது.
"மனநலம் தொடர்பான விவகாரங்கள் அனைவரையும் பாதிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் மனவுளைச்சலை வெவ்வேறு முறைகளில் எதிர்கொள்கிறோம்.
"மனநலம் தொடர்பாக நிலவி வரும் சில பிரச்சினைகளை கொவிட்-19 நெருக்கடிநிலை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது," என்று டாக்டர் வான் ரிசால் கூறினார்.