சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று அன்றாடப் பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 1,009 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான அன்றாடப் பாதிப்பு.
பாதிக்கப்பட்டோரில் 926 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 78 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 259 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த ஐவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 76,792ஆக அதிகரித்துள்ளது.
ஃபைசர் ஏஷிய பசிபிக்கில் புதிய கொவிட்-19 குழுமம் உருவாகியுள்ளது, அங்கு 22 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் ஊழியர்கள், இருவர் துப்புரவுப் பணியாளர்கள். பாதிக்கப்பட்ட இந்த இடம் தடுப்பூசி தயாரிக்கப்படும் இடம் அல்ல என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
நேற்று முன்தின நிலவரப்படி 863 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேருக்கு உயிர்வாயு சுவாசக் கருவி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 18 பேர் தீவிர சிசிக்கைப் பிரிவில் இருப்பதாகவும் அவர்
களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது. கடுமையாகப் பாதிப்பட்டவர்களில் 100 பேர் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள். இந்நிலையில், சிங்கப்பூரில் 60வது கொவிட்-19 மரணம் ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயது முதியவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மாண்டவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே புற்றுநோய், இதய நோய், நிமோனியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர் தொற்றுநோய்
களுக்கான தேசிய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது அதே நாளன்று உறுதி செய்யப்பட்டது.