மாணவர்கள் தமிழ்மொழி மூலம் தங்களது கற்பனைத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை 'தமிழ் அருவி' செயலிக்கான அறிமுக வகுப்பு வழங்கியது. நடிப்பு, குரலாக்கம், குறும்படத் தயாரிப்பு ஆகிய அம்சங்களில் மாணவர் திறனை வளர்க்க முயன்ற இந்த வகுப்பு, மெய்நிகராக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 42 மாணவர்கள், செயலியைக் கொண்டு உருவாக்கிய தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர். வெவ்வேறு பின்புலனைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மொழிக் கற்றல் சுலபமாக இருக்க வகைசெய்வதே 'தமிழ் அருவி' செயலியின் நோக்கம் என்று அதன் நிறுவனர் இலக்கியா செல்வராஜி தெரிவித்தார்.
"மாணவர்கள் சமர்ப்பித்த படைப்புகள் முதல் படியாகும். பிறகு இவை வகுப்புகளில் பயன்படுத்தப்படலாம். இது சிங்கப்பூர் தமிழ் மாணவர்களின் படைப்புப் பெட்டகமாகும். இதுபோன்ற அங்கங்களில் மாணவர்கள் பங்குபெற்று தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்வர்," என்றார் திருமதி இலக்கியா.
"வலையொலி தயாரிப்பது எப்படி என்பதைச் செயலி மூலம் அறிந்தேன். கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை இச்செயலியில் இருப்பதால் எனது தமிழ்த் திறன் மேம்படும். வாய்மொழி, எழுத்துத் திறமை போன்றவற்றைச் சோதிக்கும் தேர்வுகளில் சிறப்பாகச் செய்ய இது உதவும் என நம்புகிறேன்," என்று அறிமுக வகுப்பில் பங்கேற்ற ஏகலைவன் தெரிவித்தார்.
கைபேசி, கணினி, இணையம் எனத் தொழில்நுட்ப அம்சங்களில் தமிழ்மொழி புழங்குவதற்கு அடித்தளமாக இருப்பது தமிழ் எழுத்துருக்களே. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை நாமே எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதை விளக்கும் பட்டறைக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
பங்கேற்பாளர்கள் புதுமையும் தனித்துவமும் கொண்ட தமிழ் எழுத்துருக்களைத் தாங்களாகவே வடிவமைக்கக் கற்றுக்கொண்டனர். இந்தப் பட்டறையை வழிநடத்தி இளையர்களுக்கு எழுத்துரு வடிவமைப்பைக் கற்பித்தார் உள்ளூர் கேலிச்சித்திர, எழுத்துரு வடிவமைப்பாளர் ஜே.எஸ்.சசிகுமார், 28. இவர் இதுவரை தமிழில் மூவகை தட்டச்சு எழுத்துருக்களை உருவாக்கி உள்ளார்.
பல சிங்கப்பூர் தமிழர்கள் இவற்றை நாடி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
"இந்தப் பட்டறையின் மூலம் இளையர்கள் பலர் அதிகளவில் எழுத்துரு வடிவமைப்பில் ஈடுபட வேண்டும் என்பதே எனது ஆசை. பட்டறை, இளையர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல் எழுத்துரு வடிவமைப்பில் அவர்களுக்கு இருந்த ஐயங்களையும் போக்கியிருக்கும் என நான் நம்புகிறேன்," என்றார் சசிகுமார்.
பட்டறையில் கலந்துகொண்ட இளையர்களில் ஒருவர் ஏஞ்சல் மேரி ஓவியா, 23. இவரும் ஒரு கேலிச்சித்திரக் கலைஞர், வடிவமைப்பாளர். தமிழ் எழுத்துருக்கள் பற்றிய அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ள இந்தப் பட்டறையில் பங்கேற்றார்.
"என் போன்ற இளையர்கள், தமிழ் தொடர்பான பணிகளைச் செய்யும் பொழுது அது உற்சாகம் அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்க பேச்சுத்தமிழ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் இதுபோன்ற எழுத்துரு வடிவமைப்பின்வழி எழுத்துத்தமிழையும் இணையத்தில் தடம் பதிக்கச் செய்யலாம்.
"மிக சுவாரசியமான விதத்தில் படைக்கப்பட்ட இந்தப் பட்டறையின் வழி தமிழ் எழுத்துருக்களை எப்படி நவீன பாணியில் படைக்கலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். மற்ற தமிழ் வடிவமைப்பாளர்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் தெரிந்துகொண்டதும் பயனுள்ளதாக இருந்தது," என்றார் அவர்.
www.tinyurl.com/sasifonts என்ற இணையப்பக்கத்திலிருந்து மக்கள் சசிகுமாரின் எழுத்துருக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இளையரிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை
ஊக்குவிப்பதற்காக இம்மாதம் 4ஆம் தேதி முதல் 12ஆம்
தேதி வரை தமிழ் இளையர் விழா ஏற்பாடு செய்யப்
பட்டது. நிகழ்ச்சிகள் மூலம் மொழி மீதான ஆர்வத்தை
இளையரிடையே வளர்க்கக் கடப்பாடு கொண்டிருப் பதாகத் தெரிவித்தது ஆண்டுதோறும் தமிழ்மொழி விழாவுக்கு ஏற்பாடு செய்துவரும் வளர்தமிழ் இயக்கம்.