தகவல் திரட்டு:
இந்து இளங்கோவன்,
கி. ஜனார்த்தனன்
தமிழில் விவாதம் செய்யும் ஆர்வத்தையும் அதற்கான தளத்தையும் மாணவர்கள் தொடக்கக் கல்லூரிக்குப் பிறகும் தொடரும் வாய்ப்பைத் தன் நிகழ்ச்சிவழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்.
'சொல் யுத்தம்' என்ற மெய்நிகர் விவாதப் போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. போட்டியின் மூன்று சுற்றுகளும் நடப்பு விவகாரங்களை ஆராய்ந்தன.
"எனது குழுவிற்குத் தரப்பட்ட தலைப்பு, 'சமூக வர்க்கப் பிரிவினைகள்'. இன்றைய சூழலுக்கு மிகவும் ஏற்புடைய ஒரு தலைப்பு இது. காலம் காலமாக சிங்கப்பூரில் இந்தப் பிரச்சினை நிலவினாலும் அண்மைக் காலமாக இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
"பங்கேற்றவர்கள் தங்களது எண்ணங்களைத் தைரியமாக வெளிப்படுத்தியதன் மூலம் அவர்களிடையே மாறுபட்ட சிந்தனையும் தீர்வுகாண வேண்டும் என்ற உத்வேகமும் இருப்பதைக் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல, இந்த தலைப்பு என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. ஏனெனில், சமூக வர்க்கப் பிரிவினைகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி," என்றார் விவாதப் போட்டியில் பங்கேற்ற கேத்தரின் எழில்வளவன், 21.
"சக போட்டியாளர்களிடமிருந்தும் நடுவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். விவாதிக்கும் திறன், தலைப்பைப் பகுத்தாராயும் திறன், எதிர் விவாதங்களைக் கையாளும் உத்திகள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்டேன். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார் இளையர் கேத்தரின்.