ப. பாலசுப்பிரமணியம்
மருத்துவரைப் பார்ப்பது என்றாலே சில சிறார்களுக்குக் கசப்பான ஓர் அனுபவமாக இருக்கும். ஆனால் தொடக்கப்பள்ளி பருவத்தில் தனக்கு மருத்துவம் பார்த்தவரை ஒரு முன்மாதிரியாகக் கருதி அவரைப் போல தானும் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவர் அஸ்வின் சிங்காரம், 25.
சிறுவயதில் அவ்வப்போது ஆஸ்துமா தொடர்பாக அஸ்வின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்வார். அப்போது அங்கு குழந்தை நல மருத்துவரான இணைப் பேராசிரியர் டேனியல் கோ, நட்புறவுடன் பழகியதாக அஸ்வின் பகிர்ந்துகொண்டார்.
"மருத்துவப் பரிசோதனை போன்றே இருக்காது. நோயாளியுடன் பக்குவமாக உரையாடி, பயத்தைப் போக்கிவிடுவார். அவரையே நான் ஒரு முன்னுதாரணமாகக் கருதி, எதிர்காலத்தில் அவரைப் போன்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்று கூறினார் அஸ்வின்.
ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் அஸ்வின் பயின்றபோது வேலைப் பயிற்சி திட்டத்தை மேற்கொள்ளும் காலகட்டம் வந்தது. இதற்காக அதே தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் குழந்தை நலப் பிரிவில் மருத்துவர் டேனியல் கோவின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அவரே தேடிக்கொண்டார்.
'ஐபி' (International Baccalaureate) பாடத்திட்டத்தை அஸ்வின் முடித்த பிறகு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியில் பயில விண்ணப்பித்தார்.
2016ஆம் ஆண்டில் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து, முதல் இரண்டு ஆண்டுகளில் மருத்துவம் தொடர்பான பாடங்களுக்கு அப்பால் மற்ற விருப்பப் பாடங்களையும் அவர் கற்றுக்கொண்டார்.
பள்ளியின் மாணவர் மருத்துவச் சங்கப் பொருளாளராகவும் பின்னர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு ஏற்று, மாணவர்களுக்கென நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, பாடத்திட்டத்தைப் பற்றி மாணவர்கள் சார்பாக பள்ளியிடம் கருத்து தெரிவிப்பது போன்றவற்றில் ஈடுபட்டார்.
பட்டப்படிப்பின்போது பல உள்ளூர் மருத்துவமனைகளில் அனுபவம் பெற்றதில், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது.
"அறுவை சிகிச்சை முறையைக் கையாள்வது மிக நுட்பமானது. அதற்கு அதிகளவு அர்ப்பணிப்பும் தேவை. அறுவை சிகிச்சை வழி நோயாளியின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண முடிவதில் அதிக மனநிறைவு காண முடியும் என்று நம்புகிறேன்," என்றார் அஸ்வின்.
கொவிட்-19 சூழலிலும் மருத்துவச் சங்கத் தலைவராக, மாணவர்களின் படிப்பு தடையில்லாமல் மெய்நிகராக நடத்தப்படுவதற்குத் தான் உதவியுள்ளதாக அஸ்வின் கூறினார்.
மாறிவரும் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தை சிங்கப்பூர் நன்கு கையாண்டு வருகிறது என்றும் சுகாதார ஊழியர்களின் உழைப்பை அதில் காண முடிந்தது என்றும் சொன்னார் அவர்.
இவ்வாண்டு தன் மருத்துவப் பட்டத்தைப் பெற்ற 25 வயது அஸ்வின், ஏப்ரல் இறுதி முதல் நான்கு மாதங்களாக இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவிட்டு, தற்போது டான் டோக் செங் மருத்துவமனையில் மருத்துவ நுணுக்கங்களைக் கற்று வருகிறார்.
எதிர்காலத்தில் பொது மருத்துவமனை ஒன்றில் சேவையாற்ற விரும்பும் அஸ்வின், மருத்துவர் டேனியல் கோவைப் போல் தானும் ஒருநாள் திகழவேண்டும் என்று உறுதி கொண்டுள்ளார்.