உள்ளூர் அழகி குமாரி நந்தித்தா பானா, வரும் டிசம்பர் மாதம் இஸ்ரேலில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிக்க உள்ளார்.
இம்மாதம் 17ஆம் தேதியன்று மெய்நிகராக நடந்த சிங்கப்பூர் அழகி இறுதிச் சுற்றில் இந்தியரான 20 வயது நந்தித்தா, ஏழு மங்கையருடன் போட்டியிட்டு முதல் இடத்தைப் பிடித்தார்.
உடல் எடையைப் பற்றி கவலை வேண்டாம். ஆரோக்கிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதே முக்கியம் என்கிறார் 1.76 மீ. உயரமுடைய நந்தித்தா. வாரம் இருமுறை உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்வது, வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவது எனத் தனது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பேணுகிறார்.
‘கேர் கோர்னர்’ என்ற சமூகநல அமைப்புடன் இணைந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களுடன் பழகும் திறனை வளர்த்துக்கொள்வது போன்ற திறன்களை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கிறார் நந்தித்தா பானா.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மாற்றம், இனவாதம் போன்ற விவகாரங்களில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளர்.
விளம்பர அழகியாக (‘மாடலிங்’) தன் பயணத்தைத் தொடங்கியபோது பெற்றோர் எதிர்த்ததாகவும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தக் கூறினார். ஆனால் ஒன்றில் தீவிர நாட்டம் இருக்கும்போது எதிர்ப்புகளால் துவண்டுபோகாமல் தன்னம்பிக்கையுடன் அதில் ஈடுபடுவதே முக்கியம் என்றும் அந்த மன உறுதியே தன் வெற்றிக்கு அடிப்படை என்றும் இந்த இளம் அழகி பகிர்ந்துகொண்டார்.
செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்