சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாகனமோட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரிவர பின்பற்றாதது தெரியவந்துள்ளது.
சைக்கிளோட்டிகளிடையே பிரபலமான ஓர் இடம் தானா மேரா கோஸ்ட் ரோடு. வாரயிறுதி நாள்களில் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான சைக்கிளோட்டிகள் அந்தச் சாலை வழியாகச் செல்கின்றனர்.
அங்குள்ள சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து விளக்கு சிவப்புக்கு மாறியபோதும் சில வாகனமோட்டிகளும் சைக்கிளோட்டிகளும் வண்டியை நிறுத்தாமல் செல்வதைக் காட்டும் காட்சிகள் காணொளியில் பதிவாகின.
சாங்கி கடற்படைத் தளத்திற்கு அருகே உள்ள சாலைச் சந்திப்பு ஒன்றில் சில வாகனமோட்டிகள் போக்குவரத்து விதிமுறையை மீறி ‘யூ-டர்ன்’ எடுப்பதும் காணொளிமூலம் தெரியவந்தது.
சாலையின் இடப்புறத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சைக்கிள் தடத்தை சில சைக்கிளோட்டிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், சைக்கிள் தடத்திற்கு வலப்புறம் செல்லும் சில கனரக வாகனங்கள், சாலைச் சந்திப்பில் போக்குவரத்து விளக்கு சிவப்புக்கு மாறியபோதும் நிறுத்தவில்லை. இது, சைக்கிளோட்டிகளுக்கும் இதர வானமோட்டிகளுக்கும் ஆபத்தானதாக உள்ளது.

அங்குள்ள சாலைச் சந்திப்புகள் சிலவற்றில் சிவப்பு விளக்கு கண்காணிப்புக் கருவி (red light camera) இருப்பதாகத் தெரியவில்லை.
அப்பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா என்பதை அதிகாலை வேளையில் எவரும் கவனிக்கவில்லை என்றால், இதுதான் சரியான நேரம் எனக் கருதி சில வாகனமோட்டிகள் விதிகளை மீறுகின்றனர் என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவர் பெர்னர்ட் டே கூறினார்.
“ஒவ்வொருவரும் விதிகளைப் பின்பற்றி நடந்தால் விபத்துகள் குறையும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் சொன்னார்.