கேலாங் பாரு மற்றும் பெண்டிமியர் சந்தைகளும் உணவு நிலையங்களும் துப்புரவு மற்றும் கிருமிநீக்க பணிகளுக்காக நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும். அங்குள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வியாழக்கிழமை பிற்பகலிலேயே கேலாங் பாரு சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தின் உணவுக் கடைகளில் பாதிக்கு மேல் மூடியிருந்ததாக ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. மூடலைப் பற்றிய அறிவிப்புக் குறிப்புகள் அங்குள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.
ஜாலான் பசார் நகர மன்றமும் உணவங்காடி நிலையச் சங்கங்களும் இணைந்து, சந்தைகளையும் உணவங்காடி நிலையங்களையும் மூடும் முடிவை நிர்ப்பந்தம் இன்றி எடுத்திருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இந்த மூடல் குறித்து உணவுக்கடை உரிமையாளர்கள் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டனர்.
இந்த நிலவரம் குறித்து கேலாங் பாருவிலுள்ள வாடிக்கையாளர்களும் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர். இந்த மூடல் தமது வர்த்தகத்தை பாதித்தாலும் பாதுகாப்பாக இருப்பதே சாலச் சிறந்தது என்று இந்திய உணவுக் கடை உரிமையாளர் சர்துல் பீவி தெரிவித்தார்.
“இந்த மூடல் குறித்து எனக்கு வருத்தமாக உள்ளது. ஆயினும், நான் கிருமித்தொற்றால் பாதிப்படைய விரும்பவில்லை. நல்ல வேளையாக, வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வார நாட்களில் வேலை முடிந்து வருகின்றனர். எனவே வாரயிறுதியில் ஏற்படும் மூடலால் என் கடை பெரிதாக பாதிக்கப்படாது. ஆயினும் மற்ற கடைகள் பாதிக்கப்படலாம்,” என்று அந்த 35 வயது பெண் கூறினார்.