நேரம்...
போனதே...
தெரியவில்லை!
கையில் ஓலைச்சுவடியோடு புலவரைப் போல காட்சியளிக்கும், 1830ஆம் ஆண்டில் திருக்குறள் கற்கும் அழகப்பன் எனும் இளையர்,
எதிர்பாராத விதமாக ஒரு மாய மாற்றத்தால் நிகழ்காலத்துக்கு வந்து, சமூக ஊடகத்தில் ‘ஓஓடிடி’யைப் பதிவிடப் பிடிக்கும், தமிழ் வகுப்பில் தைரியமாக தமிழில் பேச அச்சப்படும் அன்னா என்ற மாணவியைச் சந்திக்கிறான்.
இவர்களது சந்திப்பும் அனு
பவங்களும் இருவரின் தமிழ்மொழி பயணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுதான் ‘டைம் போனதே தெரியல’ என்ற புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் கேலிச் சித்திர புத்தகத்தின் கதைக் கரு.
அதுவும் சிறுவர்களுக்கு பிடித்த விதத்தில் தமிழ்மொழி அவர்களை சென்றடைய இந்த கேலிச்சித்திர புத்தகத்தை எழுதி, தயாரித்து, வெளியிட்டும் இருக்கிறது ‘தமிழா’ என்ற அமைப்பு.
தங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் தமிழில் ஆர்வம் இருந்தும் அம்மொழியில் பேச தயக்கம் கொள்கின்றனர். அவர்களது தயக்கத்தை அகற்றி தன்னம்பிக்கை யை ஊட்ட இந்த கேலிச்சித்திர புத்தகம் ஊக்குவிக்கும் என்று நம்புகிறது தமிழா அமைப்பு.
சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் சேர்ந்து அமைத்த இந்த இளையர் குழு, தமிழ் இளையர்களிடையே தமிழ்மொழி, பண்பாட்டின் மீதான ஆர்வத்தையும் புரிதலையும் அதி
கரிக்க எடுத்து வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
குறள் வழி கதை
புத்தகத்தைத் தயாரிக்கும் எண்ணம் கடந்த 2018ஆம் ஆண்டு உருவானதாக குழுவினர் தமிழ் முரசிடம் கூறினர்.
வாழ்க்கை நெறிகளையும் திறன்களையும் பேசும் திருக்
குறளை மையப்படுத்தி இதை எழுதவேண்டும் என்றுதான் குழுவினர் முதலில் முடிவு செய்தனர்.
கதையில் எந்தெந்தக் குறள்களை பயன்படுத்தலாம் என்று கலந்துரையாடியபின், அக்குறள் களின் பொருளை எவ்வாறு சம்
பவங்கள் வழி மாணவர்களுக்குச் சேர்க்கலாம் என்று இளையர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
கேலிச்சித்திர வடிவில் உள்ளபோது இளம் வாசகர்கள் குறள் களின் பொருளைச் சுலபமாக புரிந்துகொள்வர் என்ற எண்ணத்தோடு புத்தகத்தை உருவாகியது குழு.
அனுபவம் தரும் பாடம்
ஒரு கட்டத்தில் அன்னாவின் பள்ளித் தோழிகள் அவளது முதுகிற்குப் பின் அவளைப் பற்றி அவதூறு பேசுகின்றனர்.
அப்போது, “கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்” என்ற திருக்குறளை முன்வைக்கிறது கேலிச்சித்திர புத்தகம். ஒருவர் எதிரிலேகூட கடும் சொற் களைப் பயன்படுத்தலாம் ஆனால், அவர் இல்லாதபோது அவரது குறைகளைப் பேசவேண்டாம் என்று கூறுகிறது குறள்.
நூல் தயாரான முறை
நூலை உருவாக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. எட்டுப் பேர் கொண்ட தயாரிப்புக் குழுவில் மூன்று கேளிக்கை சித்திரக் கலைஞர்களும் மூன்று எழுத்தாளர்களும் பணியாற்றினர்.
“முதலில் எழுத்தாளர்கள் மூவரும் அமர்ந்துபேசி கதையில் வரும் சம்பவங்களை எழுதி கேலிச்சித்திர வடிவத்துக்கு ஏற்படப் பிரிப்போம். பின்னர் அதை சித்திரக் கலைஞர்களிடம் ஒப்படைப்போம்,” என்றார் எழுத்தாளர்களில் ஒருவரான 23 வயது துர்கா சிங்கராஜூ.
முதலில் ஒருவர் காமிக் நூல்களில் காணப்படும் சதுரங்களை வரைந்து அவற்றில் அடிப்படை சித்திரங்களை வரைவார். பின்னர் மற்றொருவர் சித்திரங்களில் வண்ணங்களைச் சேர்ப்பார். மூன்றாவதாக ஒருவர், தமிழ் எழுத்துருக்களை வரைவார். கதையில் மாற்றம் இருந்தால் சித்திரத்திலும் மாற்றம் செய்ய வேண்டிருக்கும்.
நூலை உருவாக்கி அச்சிட ஓராண்டு பிடித்ததாகக் கூறினர் குழுவினர். தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு இந்நூலை அச்சிடும் செலவை ஏற்றுக்கொண்டது.
செந்தமிழ், பேச்சுத்தமிழ்
கேலிச்சித்திர நூல் உருவாக்கத்தைப் பற்றி பல நுணுக்கங்களை இதன் மூலம் கற்றுக்கொண்டதாக துர்கா சிங்கராஜூ கூறினார்.
“இக்கதையை எல்லோரிடமும் சேர்ப்பதற்காக செந்தமிழையும் பேச்சுத் தமிழையும் பயன்படுத்தினோம். மாணவர்களுக்கு சுவாரசியம் ஊட்டும் வகையில் பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்தோம்,” என்றார் அவர்.
நூலின் அடிப்படைப் படங்களை வரைந்த ஓவியர் ராம் பிரசாத், 26, ஏற்கெனவே சிறுசிறு கேலிச்சித்திர படைப்புக்களை உருவாக்கி பலரின் கவனத்தை ஈர்த்தவர்.
“கேலிச்சித்திர புத்தகங்களை படித்ததால் எனது மொழி மேம்பட்டது. ஆக்கபூர்வமான நபராக மேம்பட்டேன். மிக முக்கியமாக, நான் படிக்கும் நூல்களில் உள்ள கதைக்
களம், பாத்திரப் படைப்புகள். காட்சி கள் ஆகியவற்றிலிருந்து நன்னெறிகளையும் நற்பண்புகளையும் கற்றுக்கொண்டேன். இந்நூலின் வழி, அதைப் படிக்கும் இளையர்களுக்கு நான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,” என்றார் ராம்.
திருக்குறளை அடிப்படையாக சுவாரசியமான நூலை உருவாக்கும் இம்முயற்சி பாராட்டத்தக்கது. எனினும் மெய்ப்பிப்புப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நூலின் மின் நகலைப் பெறுவதற்கான தளங்கள்: கூகல் பிளே புக்ஸ் பார்ட்னர் செண்டர், ஆப்ஸ்டோரில் உள்ள ஆப்பிள் புக்ஸ், இ-செண்ட்ரல் (E-sentral), பார்ன்ஸ் அண்ட் நோபல், அமேசான்.