தொடக்கப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையை மேலும் நீட்டிப்பது குறித்து அடுத்த சில நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 7ஆம் தேதிவரை தொடக்கநிலை 1 முதல் 5 வரையிலான மாணவர்கள் வீட்டிலிருந்து கற்பர் என்று கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்து இருந்தது. 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை குழந்தைகள் தினம் என்பதாலும் அதன்பின் இரு நாள்கள் வாரயிறுதி விடுமுறை என்பதாலும் முன்னைய அறிவிப்பின்படி தொடக்கநிலை 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்கள் 11ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளில் கவனம் செலுத்த ஏதுவாக, வீட்டிலிருந்து கற்கும் திட்டத்தை நீட்டிப்பது குறித்து உடனே முடிவெடுக்கவில்லை என்று திரு சான் குறிப்பிட்டார்.