வெள்ள அபாயத்தைக் குறைக்க இயற்கைத் தீர்வு குறித்த ஆய்வு
வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இயற்கைத் தீர்வுகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் கணிக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் 'ஈஓஎஸ்' எனப்படும் சிங்கப்பூர் உலக ஆய்வுக்கூடத்தின் ஆய்வாளர்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
உதாரணமாக, காடுகளால் எவ்வாறு வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும், காடுகளை அகற்றினால் எத்தகைய பொருளியல், உயிர் இழப்பு ஏற்படும் போன்றவற்றைக் கணிப்பது இலக்கு. பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூர் இயற்கைத் தீர்வுகளை நாடும் வேளையில் இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து கற்றல் குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வீட்டிலிருந்து கற்கும் திட்டத்தை கூடுதல் நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து இவ்வார இறுதியில் முடிவெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். தொடக்கநிலை ஒன்று முதல் ஐந்து வரையிலான மாணவர்கள், தற்போது நடப்பில் இருக்கும் திட்டம் முடிந்தவுடன் அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று மீண்டும் பள்ளிக்குச் செல்லவேண்டும்.
சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து நாளைவரை இருந்த திட்டம் நடப்பில் இருக்கும் எனக் கல்வி அமைச்சு முதலில் அறிவித்தது. பின்னர் திட்டம் நாளை மறுதினம் வரை நீட்டிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை சிறுவர் தினம். பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளில் கவனம் செலுத்த வகைசெய்ய இது குறித்து உடனே முடிவெடுக்கவில்லை எனத் திரு சான் சொன்னார்.
2,057 கொவிட்-19 சம்பவங்கள், ஆறு மூத்தோர் மரணம்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 2,057 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், கிருமித்தொற்றுக்கு ஆளான 68 வயதுக்கும் 91 வயதுக்கும் உட்பட்ட ஆறு மூத்த சிங்கப்பூரர்கள் மரணமடைந்தனர்.
மாண்டோரில் ஐவர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இருவர் போட்டுக் கொள்ளாதவர்கள். ஐவருக்கு ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஒருவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.