அரசாங்கத்திடமிருந்து 'ஏஆர்டி' கொவிட்-19 பரிசோதனை சாதனங்களைப் பெற்றுக்கொள்ள 11,000 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. இவற்றில் 4,200 நிறுவனங்கள் ஏற்கெனவே சாதனங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் இதர நிறுவனங்கள் இவ்வார இறுதிக்கும் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இலவசமாக வழங்கப்படும் இச்சாதனங்கள், வேலையிடத்திற்குச் செல்லும் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த சாதனங்களைக் கொண்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது, எட்டு வாரங்களுக்கு நீடிக்கும். ஊழியர்கள் வீட்டில் சொந்தமாக தங்களைச் சோதித்துக்கொள்ளலாம் அல்லது வேலையிடங்களில் சோதித்துக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. பரிசோதனைகளை எப்படி மேற்கொள்வது என்பதை நிறுவனங்கள் முடிவுசெய்யலாம் என்றும் அமைச்சு கூறியது.
நிறுவனங்களுக்கான இந்தப் பரிசோதனைத் திட்டம் எட்டு வாரங்களுக்கு நடப்பில் இருக்கும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு சென்ற மாதம் ஆறாம் தேதியன்று அறிவித்தது. 16 அமைச்சுகள், 50க்கும் அதிகமான ஆணை பெற்ற கழகங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கென 1.2 மில்லியன் சாதனங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ம்ஸ் தெரிவித்திருந்தது.