தனியார் வர்த்தகச் சொத்துகளில் இயங்கும் சில சிறிய நடுத்தர நிறுவனங்கள், லாப நோக்கில்லா அமைப்புகள் ஆகியவற்றுக்கு இன்று முதல் வாடகைத் தள்ளுபடி கடிதங்கள் அனுப்பப்படும். சட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் கடிதங்களை அனுப்பும்.
'ரென்டல் வெய்வர் ஃபிரேம்வர்க்' எனப்படும் வாடகை தள்ளுபடி திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி வர்த்தகச் சொத்துகளின் உரிமையாளர்கள் வாடகைக்குத் தங்களின் இடங்களில் இயங்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் லாப நோக்கில்லா அமைப்புகளுக்கும் இரண்டு வார காலத்திற்கு வாடகைத் தள்ளுபடி அளிக்கவேண்டும். திட்டத்திற்குத் தகுதிபெறும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.
திட்டம் நேற்று நடப்புக்கு வந்தது. உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடப்பில் இருக்கும்போது வாடகை சார்ந்த பொறுப்புகளை அரசாங்கம், சொத்து உரிமையாளர்கள், தகுதிபெறும் வாடகைதாரர்கள் ஆகிய முத்தரப்பும் சரிசமமாகக் கையாள்வதைக் இத்திட்டம் உறுதிசெய்கிறது.
இதன் தொடர்பில் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தில் சென்ற மாதம் திருத்தங்கள் செய்யப்பட்டன. வாடகை ஆதரவுத் திட்டத்தின்கீழ் இரண்டாவது முறையாக வழங்கீடு பெற்ற வாடகைதாரர்களுக்கு அஞ்சல்வழி கடிதங்கள் அனுப்பப்படும் என்று சட்ட அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
கடிதங்களைப் பெற்றவுடன் வாடகைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம் கிடையாது. கடிதம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட வாடகைதாரர்கள் 28 நாட்களுக்குள் கடிதத்தின் நகல்களையும் இதர சில ஆவணங்களையும் தாங்கள் வாடகைக்குப் பயன்படுத்தும் இடங்களின் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பவேண்டும். அதற்குப் பிறகே வாடகைத் தள்ளுபடி செய்யப்படும்.