ஊழியர்கள் தங்குவதற்கு
ஏற்புடைய இடத்தை வழங்கத்
தவறியதாக 42 வயது சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் பதிவாகின. 12 பேர் மட்டுமே தங்கக்கூடிய இடத்தில் 39 வெளிநாட்டு ஊழியர்களை அடைத்து வைத்ததாக லாவ் லியோங் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தகுந்த வேலை அனுமதி அட்டை இல்லாமல், வெளிநாட்டு ஊழியர் ஒருவரை வேலையில் அமர்த்தியது தொடர்பான குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார். அனுமதி பெறாமல் தனியார் வீடுகளை தங்குவிடுதிகளாக மாற்றியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனியார் வீடுகளைத் தங்குவிடுதிகளாக மாற்றிய குற்றம் உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை மற்றொரு சிங்கப்பூரரான 58 வயது டே கிம் கியட் எதிர்நோக்குகிறார்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியன்று கேலாங் லோராங் 23ல் உள்ள இரு மூன்று மாடி கடைவீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தியதில் 12 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 39 வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் மனிதவள அமைச்சும் தெரிவித்தன. ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.