சன்டெக் சிட்டி கடைத்தொகுதியில் பயன்படுத்தப்பட்ட தீபாவளி அலங்காரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அலங்காரம் மாற்றப்படும் என அக்கடைத்தொகுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதை முன்னிட்டு சன்டெக் சிட்டி கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், ‘ஹேப்பி திவாளி’ என்ற அலங்காரத்துடன் கூடிய வாசகம், கடைத்தொகுதியின் நுழைவாயில் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது.
அதைப் படமெடுத்த தமிழ் முரசு வாசகரான திரு ஜெயராமன் கோதண்டபாணி, அப்படத்தை தமிழ் முரசுக்கு அனுப்பிவைத்தார்.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று தமிழ். எனவே, தீபாவளி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்தியாவின் வட மாநிலங்களில் குறிப்பிடுவதைப்போல ‘திவாளி’ என்று எழுதப்பட்டிருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சன்டெக் சிட்டியிடம் தீபாவளி அலங்காரம் குறித்து கேட்டறிய அக்கடைத்தொகுதி நிர்வாகத்தை தமிழ் முரசு தொடர்புகொண்டது.
சன்டெக் சிட்டி மூத்த நிர்வாகத்திற்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் எடுக்கப்படும் முடிவு பற்றி தெரிவிக்கப்படும் என்றும் தமிழ் முரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில், சன்டெக் சிட்டி நிர்வாகம் பின்னர் அளித்துள்ள தகவல் ஒன்றில், தீபாவளி அலங்காரம் நாளை மறுநாளுக்குள் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது.