காதல் மோசடி செய்து அதன் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 23 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டதாகப் போலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம், காதல் மோசடிக்கு ஆளானதாக ஒரு பெண் புகார் தந்தார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தன்னை அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் என்றும் தான் சிங்கப்பூரில் வாழத் திட்டமிட்டிருந்ததாகவும் சொன்ன ஓர் ஆடவருடன் நட்பு வைத்துக்கொண்டதாக அப்பெண் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு வரவிருந்ததாகச் சொல்லியதையொட்டி தனது உடைமைகளைக் கொண்ட பொட்டலங்களை பெண்ணுக்கு அனுப்பப்போவதாக ஆடவர் கூறியிருக்கிறார். அவற்றுக்குக் காத்திருக்கும் வேளையில் தெரியாத தனிநபர்களிடமிருந்து பெண்ணுக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. பொட்டலங்கள் மலேசியாவில் சிக்கியிருந்ததாகவும் அவற்றை அனுப்ப பணம் செலுத்தவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பெண் ஆடவரின் வங்கிக் கணக்கிற்கு 15,000 வெள்ளியை அனுப்பியிருக்கிறார்.
குற்றச் செயலின் மூலம் பலனடைந்ததாக ஆடவர் மீது இன்று இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனை, ஐநூறாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவத்திற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்புதான் பெரிய அளவிலான காதல் மோசடி ஒன்று முறியடிக்கப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளின் போலிசாரும் இணைந்து அதை முறியடித்தனர்.