சிராங்கூன் சாலையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கடை ஒன்றை உடைத்துத் திருட முயற்சி செய்த 29 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
அந்தக் கடையின் முகப்புக் கண்ணாடி சேதமடைந்து காணப்பட்டது. அந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணை மற்றும் போலிஸ் கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள்மூலம், மத்திய போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதிசெய்தனர். போலிசிடம் புகார் அளிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த ஆடவரிடமிருந்து ஓர் இணை கையுறைகள், சுத்தியல் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த ஆடவர்மீது இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
கடையை உடைத்துத் திருட முயற்சி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்படால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.