ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள வீவக வீட்டில் இன்று தீ விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் உயிேராடு மீட்கப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம், தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இன்று அதிகாலை 2.25 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட், புளோக் 978, 5வது மாடியில் உள்ள வீட்டில் தீ மூண்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.
அங்கு வந்த தீயணைப்பாளர்கள், வீட்டுக்கு வெளியே சுவரையொட்டிய பிடிப்பில் இருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். கதவை உடைத்து படுக்கை அறையில் நுழைந்த தீ அணைப்பு வீரர்கள், அங்கிருந்து இருவையும் மீட்டனர்.
படுக்கை அறை முழுவதும் எரிந்துவிட்டது. 22 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு இறந்துகிடந்தார்.
குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு வருவதற்கு முன்பே சுயநினைவை இழந்த 24 வயது ஆடவரை மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்ததாக போலிசார் கூறினர். அக்கம்பக்க வீடுகளில் இருந்த சுமார் 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இரண்டு தீயணைப்பாளர் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பியதாக தெரிவிக்கப் பட்டது.
ஃபேஸ்புக் பதிவில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான தீ விபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டது.
யுஎல்2272 சான்றிதழ் பெறாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் அவற்றை அகற்றுமாறும் அது வலியுறுத்தியது.