சிங்கப்பூரில் கொவிட்-19 சமூக கிருமித்தொற்றுக்கான இரட்டிப்புக் காலம் மெதுவடைந்து இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
அன்றாடம் அதிகம் பேருக்குத் தொற்று ஏற்படுவதன் காரணமாக நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குக் கணிசமான சுமை ஏற்பட்டு இருக்கிறது என்றாலும்கூட தொற்று அதிகரிப்பு விகிதம் மெதுவடைந்து இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
கிருமித்தொற்று இரட்டிப்புக் காலம் மூன்று வாரங்களுக்கு முன் ஆறு முதல் எட்டு நாட்களாக இருந்தது. அது இப்போது ஏறத்தாழ 10 முதல் 12 நாட்களாக ஆகி இருக்கிறது.
கொவிட்-19 தொற்றுவோரில் ஏறக்குறைய 98.4 விழுக்காட்டினருக்கு அறிகுறி எதுவும் தெரியவில்லை. அல்லது லேசான அறிகுறிகள்தான் தென்படுகின்றன.
நோயாளிகளில் 1.3 விழுக்காட்டினருக்கு மட்டுமே உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. 0.1% மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடுமையான அறிகுறிகள் அல்லது ஏற்கெனவே மருத்துவப் பிரிச்சினைகள் இருப்பதால் ஏறத்தாழ 7 விழுக்காட்டு கொவிட்-19 நோயாளிகள் இப்போது மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்.
முற்றிய நோயாளிகளுக்கான மருத்துவமனைகளில் மற்றும் சமூக மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஏறத்தாழ 20 விழுக்காடு படுக்கைகளை இப்போது கொவிட்-19 நோயாளிகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 60க்கும் அதிக வயதுள்ள முதியவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது. அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது முற்றிலும் போட்டுக்கொள்ளாதவர்கள்.
மொத்த மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டை இவர்கள் பிரதிநிதிக்கிறார்கள். என்றாலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் இவர்களே ஆவர்.
கடந்த மூன்று மாதங்களில் தொற்று இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவசரநிலைப் பிரிவுகளில் சிறப்பு சிகிச்சை நாடிய நோயாளிகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு கூடி இருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோர் முன்னெச்சரிக்கை கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. கொவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் 900லிருந்து 2,500 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த எண்ணிக்கையை இந்த மாத முடிவில் 3,700 ஆக ஆக்குவது அமைச்சின் இலக்காக இருக்கிறது.
அவசர சிகிச்சை தேவைப்படாத பொதுமக்கள் மருத்துவமனைகளை நாட வேண்டாம் என்று அமைச்சு வலியுறுத்தி கூறி இருக்கிறது.
குடும்ப மருத்துவரை அல்லது தனியார் மருத்துவரை நாடும்படி அவர்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.