புதிய கொவிட்-19 விதிமுறைகள் தொடர்பாக கடைத்தொகுதிகள் கூடுதல் தகவல்களை நாடுகின்றன.
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு அதன்படி செயல்படும் நோக்குடன் கடைத்தொகுதியில் உள்ள வர்த்தகங்கள் தெளிவான விவரங்களைக்
கேட்டறிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் நாளை முதல் கடைத்
தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. இதுதொடர்பான விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள கடைத்
தொகுதிகளில் செயல்படும் வர்த்தகங்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட்டால் தொடர்ந்து கடைத்தொகுதிகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியை இந்த வர்த்தகங்கள் எழுப்பியுள்ளன.
நாளை முதல் கடைத்தொகுதி
களுக்கும் பேரங்காடி இல்லாப் பெரிய கடைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் செல்ல முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதபோதிலும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தோரும் 12 வயதும் அதற்கும் குறைவான சிறுவர்களும், பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களும் கடைத்
தொகுதிகளுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பரிசோதனை முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
நாளை புதிய விதிமுறைகள் நடப்புக்கு வருவதற்கு முன்பு கூடுதல் விவரங்கள் கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று அரசாங்கம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாது, புதிய விதிமுறைகளுக்குக் கடைத்தொகுதிகள் முழுமையாக உட்பட்டு நடப்பதற்கு முன்பு நாளையிலிருந்து ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய விதிமுறைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைப் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தது.
அதன்மூலம் சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும் என்று அது கூறியது.
கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அன்றாட கொவிட்-19 பாதிப்பு 3,000ஐ கடந்த பிறகு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
புதிய விதிமுறை குறித்து வர்த்தகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
உதாரணத்துக்கு, கர்ப்பிணிகளை அதிகம் நம்பியிருக்கும் வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கர்ப்பிணிகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுதக்கொள்ளாததே இதற்குக் காரணம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வியாபாரம் குறையும் என்று வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.