மெத்தடிஸ்ட் நல்வாழ்வுச் சேவை
களின் கிறிஸ்டலைட் மெத்தடிஸ்ட் இல்லத்தில் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகள் மருத்துவமனைகளிலும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமான தனிமைப்படுத்தும் நிலையங்களில் குணமடைந்து வருவதாக இல்லத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அந்த இல்லத்தில் 91 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 84 பேர் இல்லவாசிகள், ஏழு பேர் ஊழியர்கள். இல்லத்தில் இருந்த ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான இல்லவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது இலேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு பகல் நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வேலை நிமித்தம் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இல்லவாசிகள் தனிப்பட்ட முறையில் வெளியே செல்வதும் கடந்த மே மாதம் 8ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து இல்லத்துக்குச் செல்ல விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.
புதிய இல்லவாசிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.