சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒன்பது முதியவர்கள் மாண்டுவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதன்மூலம் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாண்டவர்களில் எட்டு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் அடங்குவர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள். நால்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மூவர் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டவர்கள். இருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கெவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது. ஆனால் அது குறித்து அது கூடுதல் விவரம் தரவில்லை.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மேலும் 2,809 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. கடந்த சனிக்கிழமையன்று பதிவான எண்ணிக்கையைவிட இது 894 குறைவு.
சமூக அளவில் 2,176 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கு விடுதிகளில் 631 பேருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 449 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
நேற்று முன்தினம் பதிவான எண்ணிக்கையுடன் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 126,966ஆக அதிகரித்துள்ளது.