சுவா சூ காங்கில் டாக்சியை அடித்து நொறுக்கிய 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
புளோக் 804B கியட் ஹோங் குளோசில் ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10) நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து ஸ்டோம்ப் இணையத்தளத்திற்கு வாசகர்கள் சிலர் தெரியப்படுத்தினர்.
அந்த ஆடவர் வெறிச்செயலில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
அதில், தம் மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்தைக் கொண்டு டாக்சியின் பக்கவாட்டுக் கண்ணாடியை அந்த ஆடவர் நொறுக்குவதைப் பார்க்க முடிகிறது.
அந்த டாக்சி ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் அவர் திட்டுவதையும் கேட்க முடிகிறது.
மற்றொரு காணொளியில், தம் தலைக்கவசத்தைக் கொண்டு அந்த டாக்சியின் முன்பகுதியை அந்த ஆடவர் சேதப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.
மாலை 6.10 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றி தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.
“போக்குவரத்து சச்சரவு தொடர்பில் அந்த டாக்சி ஓட்டுநரை அந்த ஆடவர் எதிர்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,: என்று போலிஸ் கூறியது.
அந்த நேரத்தில் டாக்சியில் குழந்தை உட்பட பயணிகள் இருந்தனர். அவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை.
தீவிர விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதிசெய்து அவரைக் கைது செய்தனர்.
நாளை வியாழக்கிழமை அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.