இன்றைய இளையர்கள் வேறுபட்ட மனநல சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்று என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பும் பட்சத்தில் இது ஓர் ஆழமான பிரச்சினை என்பதை அவசியம் அது அங்கீரிக்கவேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
அரசு ஆதரவு பெற்ற இளையர் மனநலக் கட்டமைப்பு என்ற இயக்கத்தின்கீழ் இடம்பெறும் ஒரு சமூக ஆதரவு செயல்திட்ட ஏற்பாட்டில் இடம்பெற்ற நேரடி விவாதிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டார். அது ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இளையர்கள் தாராள சிந்தனை உள்ளவர்களாக, போராட்ட குண முள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படுவது உலகம் முழுவதுமே உள்ள இளையர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கிறது என்றார் அமைச்சர்.
இருந்தாலும் மனநலம் என்று வரும்போது இந்தத் தலைமுறையைப் பார்க்கையில் ஏதோ மாற்றம் காணப்படுவதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
இளையரிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து இருக்கிறது என்பது உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட உலகம் முழுவதையும் சேரந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிவதாகக் கூறிய திரு ஓங், கடந்த 10, 20 ஆண்டுகளில் ஏதோ மாறி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது முக்கிய மானது என்றார்.
இதுவே சுகாதார அமைச்சின் சிந்தனையில் எப்போதுமே இருந்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தலைமையில் அமைந்துள்ள பல அமைப்புகளுக்கு இடையிலான சிறப்புப் பணிக்குழு இளையர்களின் கருத்துகளைச் செவிமடுப்பதில் நாட்டமாக இருக்கிறது என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
சமுதாய, குடும்ப மேம்பாடு, கல்விக்கான துணை அமைச்சர் சுன் ஸுவெலிங் நேற்றைய கலந்துரையாடலை வழிநடத்தினார்.
சமூக ஊடகம் நல்லவற்றைச் சாதிக்கக்கூடிய சக்தியாக திகழ முடியும் என்று திருவாட்டி சுன் குறிப்பிட்டார். இருந்தாலும் அது பாதகமாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டினார்.
இந்தச் சூழலில் கலந்துரையாடல்களை சமூகம் வழக்கமாக்க வேண்டியது தேவையானதாக இருக்கிறது என்றார் அவர்.
மெய்நிகர் உலகில் தாக்குப்பிடித்து நிலைத்திருக்க தேவையான தேர்ச்சிகளை இளையர்களுக்கு இளம் வயதிலிருந்தே போதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் திரு ஓங் வலியுறுத்தி கூறினார்.
இன்றைய இளையர்கள் எதிர்நோக்கும் மனநலப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, ஒளிவுமறைவு இல்லாத நிலை வேண்டும் என்று திரு ஓங் கோரிக்கை விடுத்தார். அத்தகைய பிரச்சினைகளை அங்கீகரிப்பதன் தொடர்பில் அரசாங்கம் தெள்ளத்தெளிவான ஒரு நிலையை எடுக்க முடியும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.