உதவி தேவைப்படும் வசதி குறைந்த இந்தியர்கள், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் தொடர்பில் தொடர்ந்து இருக்கும்படியும் உதவி தேவைப்படும்போது அதனைக் கேட்க தயங்கவேண்டாம் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
வரும் தீபாவளிப் பண்டிகையில் வசதி இல்லாதோர், வசதி படைத்தோர் என வேறுபாடின்றி அனைவருமே கொண்டாட்ட உணர்வில் திளைக்கவேண்டும் என்ற சகோதரத்துவ நோக்குடன் சிண்டா தொடர் இயக்கம் போல செயல்படுவதாக அவர் கூறினார்.
இந்திய சமூகத்தினரின் கல்வி, பொருளாதார தேவைகளுக்கான நிதி திரட்டுத் திட்டமான 'புரோஜெக்ட் கிவ் 2021', நேற்றும் இன்றும் வசதி குறைந்தோருக்கு தீபாவளிப் பலகாரங்களையும் 120 வெள்ளி மதிப்பிலான மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகளையும் வழங்குகிறது.
இவ்வாண்டு 1,900 குடும்பப் பயனாளர்கள் அன்பளிப்புப் பைகளைப் பெறுகின்றன.
இந்த எண்ணிக்கை, கடந்தாண்டின் எண்ணிக்கையைவிட 20 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்ட திரு அன்பரசு, கொவிட்-19 கிருமிப் பரவலால் பல குடும்பங்களில் வேலையிழப்பு நேர்ந்துவிட்டதாக சிண்டா அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது கூறினார்.
சிண்டாவின் உதவித் திட்டத்தில் இடம்பெறுவோருடன் மற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் சிண்டா உதவுவதாகஅவர் கூறினார்.
"அன்பளிப்புப் பைகள், பொருள் உதவி மட்டுமின்றி இந்தப் பயனாளர்களுடன் தொடர்பை வலுப்படுத்தும் கருவியாக உள்ளது," என்று திரு அன்பரசு கூறினார்.
ஹோப் அலையன்ஸ் இனிஷியேட்டிவ், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் ஜைனர் சமயச் சங்கம், சுகாதார மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றன.
ஒவ்வொரு அன்பளிப்புப் பையிலும் பலகாரங்களுடன் 'ஓட்ஸ்', 'மைலோ' போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளன. பைகளில் சேர்க்கப்பட்ட லட்டுக்கள், ஜைன சமய விதிகளின்படி வேர் காய்கறிகள் சேர்க்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் உதவி, மூத்தோரின் தேவைகள் மீது கவனம் செலுத்தும் என்று கூறிய திரு அன்பரசு, சிங்கப்பூரின் சமூகம் மூப்படைவதால் இதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"முதியோர் பலரின் தனிமையை கொவிட்-19 கிருமிப் பரவல் கடந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் இருந்து இவர்களைக் காண இயலாமல் போகலாம்.
சிலர் பிள்ளைகள் இல்லாத முதிய தம்பதியினராகவோ அல்லது ஒற்றை முதியவராகவோ இருக்கலாம். கிருமித்தொற்றால் சிலர் வீட்டிலேயே அடைபட்டிருப்பது போன்ற உணர்வால் அவர்களுக்கு மன அழுத்தமும் உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும்," என்று அவர் குறிப்பிட்டார்.
தீபாவளி காலகட்டத்தில் இளைய தொண்டூழியர்கள் பலர், தனிமையில் இருக்கும் முதியோரை நலம் விசாரித்து அவர்களது வீட்டை அலங்கரிப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.
'புரோஜெக்ட் கிவ்' திட்டத்திற்கு 20 ஆண்டுகளாகவும் அன்பளிப்புப் பை திட்டத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளாகவும் தொண்டாற்றிவரும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் இவ்வாண்டும் இந்தப் பணியில் ஈடுபடுகிறது என்று மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவரான ஜாய்ஸ் கிங்ஸ்லி தெரிவித்தார்.
"கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிராக சிண்டா செயல்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது," என்று அவர் கூறினார்.
சிண்டாவின் அன்பளிப்புப் பை திட்டத்தால் தங்களது வட்டாரத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக பூன் லே இந்திய நற்பணி செயற்குழுவைச் சேர்ந்த அருளானந்தன் தெரிவித்தார்.
பல்லாண்டுகளாக சிண்டா கொடுத்துவந்த புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி உதவியுடன் இந்த தீபாவளி உதவி வழங்கப்படுவது குறித்து வட்டாரவாசிகள் மகிழ்வதாக அக்குழுவின் மற்றோர் உறுப்பினர் கென்னடி தெரிவித்தார்.கூடுதல் செய்தி: ஜமிலா அக்பர்
கி. ஜனார்த்தனன்