பொங்கோலில் வீவக புளோக் ஒன்றில் குப்பை சேரும் அறையில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் மாண்டுகிடந்தார். பொங்கோல் சென்ட்ரல் வீவக புளோக் 623சி-யில் அந்த 54 வயது துப்புரவுப் பணியாளரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
ஆடவர் மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் நேற்று காலை சுமார் 8.15 மணிக்கு சம்பவ இடத்தில் உறுதிப்படுத்தியதாக போலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய செயல் குறித்த ஐயங்கள் இல்லை என்றும் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலிசார் கூறினர். மாண்டவர் பாசிர்-ரிஸ் பொங்கோல் நகர மன்றத்தில் உள்ள பகுதிகளில் வேலை செய்தவர். அவர் வீவக புளோக்குகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வந்தவர்.
குப்பைக் சேரும் அறையின் கதவிற்கும் குப்பை விழும் பகுதிக்கும் இடையே அவர் சிக்கியிருந்ததாக மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது. உயிரிழந்த துப்புரவுப் பணியாளர் திரு லீ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் லியென் செங் கான்ட்ரெக்டிங் நிறுவனத்திற்கு வேலை செய்தார்.
சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது. கட்டடத்தின் குப்பைகளையும் சேகரிக்கும் பகுதிகள் உள்ளிட்டவற்றின் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அமைச்சு லியென் செங் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இவ்வாண்டு நேர்ந்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.