கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) நேற்றுக் காலை கிட்டத்தட்ட 250 பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கிய SQ329 விமானத்தில் நெதர்லாந்திலிருந்து ஏறக்குறை 80 பயணிகள் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
ஒன்றரை மணி நேரம் கழித்து, லண்டனிலிருந்து 170 பயணிகளுடன் SQ317 விமானம் தரையிறங்கியது.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் வந்திறங்கிய இந்தப் பயணிகளில் பெரும்பாலானோர், தனியாக அல்லது தம்பதியாக வந்திருப்பவர்கள் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழுவினர் அறிந்தனர். குழந்தைகளுடன் குறைந்தது மூன்று குடும்பங்கள் வந்திருந்தனர். பயணிகளில் ஆசியர்களும் வெள்ளையர்களும் கலந்து காணப்பட்டனர்.
வருகையாளர் பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. பொதுமக்கள் அனுமதிக்கப்படாத பகுதி வழியாக பயணிகள் வழிநடத்தப்பட்டனர்.
விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியே செல்வதற்கு முன்னர், விமான நிலையப் பணியாளர் அவர்களுக்கு 'பிசிஆர்' பரிசோதனையை மேற்கொண்டார்.
பயணிகளை அழைத்துச்செல்ல வந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒரு தனிப் பகுதியில் காத்திருந்தனர்.
வாகனம் ஓட்டி வந்தவர்கள் பயணிகளைச் சந்தித்த பிறகு வாகன நிறுத்துமிடத்துக்குத் தனி மின்தூக்கியில் செல்ல வேண்டும். அதனை ஏனைய பொதுமக்கள் பயன்படுத்த முடியாது.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒன்பது நாடுகளுக்குத் தனிமை உத்தரவின்றி சென்றுவர முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ், தற்போது (அக்டோபர் 19 முதல்), கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம். சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அவர்கள் இங்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
சிங்கப்பூர் இதுவரை மொத்தம் 11 நாடுகளுடன் இந்த இருதரப்பு பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. நவம்பர் 15 முதல், விடிஎல் திட்டம் தென்கொரியாவுக்கும் நீட்டிக்கப்படுகிறது.