வேலையிடங்களில் நியாயமான அணுகுமுறை நடப்பில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உள்ளூர் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கவும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) முதலாளிகள் கூட்டமைப்பும் பல பரிந்துரைகளை முன்வைத்து இருக்கின்றன.
அவற்றை மனிதவள அமைச்சு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதவளக் கொள்கைகள், வேலை இடங்களில் நியாயமான அணுகுமுறை ஏற்பாடு, வேலை நியமன ஆதரவு செயல்திட்டங்கள் ஆகியவற்றை அமைச்சு இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.
இதில் அந்தப் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று நேற்று அமைச்சு தெரிவித்தது.
என்டியுசியும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் அமைத்து இருக்கும் சிறப்புப் பணிக்குழு, நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்களுக்கு (பிஎம்இ) உதவுவதற்கான ஒன்பது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதன் தொடர்பில் அமைச்சு நேற்று தனது நிலையை விளக்கியது.
வேலையிடத்தில் நியாயமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதற்கான ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்காக ஜூலை மாதம் முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதை நேற்று அமைச்சு சுட்டிக்காட்டியது.
அந்தக் குழு, இப்போதைய பரிந்துரைகளை ஆராயும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
உள்நாட்டு பிஎம்இ ஊழியர் அணிக்கு வெளிநாட்டு பட்டத் தொழிலர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும் நிறு வனங்கள் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கித் தர அவர்கள் உதவுகிறார்கள் என்பதை யும் உறுதிப்படுத்த காலக்கிரம முறைப்படி வேலை அனுமதிக் கொள்கைகளை அமைச்சு மறுபரிசீலனை செய்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக்கொண்ட வலுவான ஊழியர் அணி இருக்கவேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் எம்பிளாய்மெண்ட் பாஸ் ஏற்பாட்டை மேலும் செம்மையாகத் திருத்தி அமைப்பதற்கான வழிவகைகளை தான் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
உள்ளூர்வாசிகளுக்குப் பல வேலை வாய்ப்புகளும் கிடைக்க உதவுவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருந்து வந்துள்ளது என்பதையும் அமைச்சு சுட்டியது.