சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நவம்பர் 4ஆம் தொடங்கி, நான்கு நாள்களுக்கு தீபாவளிக் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தேறின.
மனிதவள அமைச்சுடன் சேர்ந்து Alliance of Guest Workers Outreach அமைப்பு இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது.
புகைப்படக் கூடங்கள், மனநலனைப் பேணிக் காக்க சிறப்புரை, இலவச முடித்திருத்தச் சேவை உள்ளிட்ட அம்சங்கள் நிகழ்ச்சியில் அங்கம் வகித்தன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அதுபோக, பல்வேறு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5,000 உணவுப் பொட்டலங்கள் கடந்த நான்கு நாள்களாக விநியோகம் செய்யப்பட்டன.
இன்று நிறைவுபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடனம், ரங்கோலிப் போட்டிகளின் இறுதிச்சுற்று நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் பயணப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
நான்கு நாள்களில் ஏறத்தாழ 2,500 பேர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.
