மருத்துவமனையில் 1,700
கொவிட்-19 நோயாளிகள்
மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1,700 கொவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பொது மருத்துவமனைப் படுக்கைப் பிரிவுகளில் உயிர்வாயு தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் 300 பேர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமான கண்காணிப்பில் 68 நோயாளிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்வாயு தேவைப்படும் நிலையில் 72 நோயாளிகளும் உள்ளதாகக் கூறப்பட்டது. நேற்று முன்தினம் புதிதாக 3,397 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அத்துடன் கிருமித்தொற்றால் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 58 வயதுக்கும் 95 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஒருவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.
சாங்கி சிறைச்சாலை வளாகத்தில்
மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள 'இன்ஸ்டிடியூஷன் ஏ1' கட்டடத்தில் கைதிகள் மற்றும் பணியாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சிங்கப்பூர் சிறைச் சேவை தெரிவித்தது. கிருமி மேலும் பரவாமல் இருக்க, கட்டடத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதே கட்டடத்தில்தான் மலேசியாவிலிருந்து போதைப்பொருள் கடத்திய மலேசியர் நாகேந்திரன் கே.தர்மலிங்கம் இருந்ததாகவும் மரண தண்டனையை எதிர்நோக்கும் அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் கைதிகளில் இரண்டு தடுப்பூசிகளையும் 90% கைதிகள் போட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூர், கோலாலம்பூர் விமானப் பயணங்களில் ஆர்வம் மிகுதி
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே தனிமை உத்தரவு ஏதுமில்லாத விமானப் பயணங்கள், 'விடிஎல்' திட்டத்தின்கீழ் தொடங்கும் என்று திங்கட்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணங்களுக்காக செய்யப்பட்ட விற்பனைப் பதிவுகள் ஒரே நாளில் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே தினமும் ஆறு 'விடிஎல்' விமானப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இது தொடர்பில் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.