ஆஸ்துமா மற்றும் இதர ஒவ்வாமை பிரச்சினைகள் நேராமல் தவிர்க்கும் வழி, அமெரிக்காவில் வாழும் ஆமிஷ் சமூக சிறாரிடையே வேரூன்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வாமை மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
உலகில் 30% சிறாருக்கு ஒவ்வாமைப் பிரச்சினைகளும் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினருக்கு ஆஸ்துமா, நாசியழற்சி ஒவ்வாமையும் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் தொடர்பில் பொருளியல் மீது ஆஸ்துமா ஏற்படுத்திய தாக்கத்தின் மதிப்பு 1992ல் ஏறத்தாழ $33.93 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அதே ஆஸ்துமாவின் தாக்கம் $1.5 பில்லியன் அமெரிக்க டாலராகலாம் (S$2 பி.) என்று முன்னுரைக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆஸ்துமா மற்றும் இதர ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம், நகரங்களில் வளரும் சிறுவர்களைக் காட்டிலும் பண்ணைகளில் வளர்ந்த சிறுவர்களுக்குக் குறைவாக இருந்ததைப் பல ஆண்டு காலமாகவே அமெரிக்க விஞ்ஞானிகள் கவனித்து வந்தனர்.
அதற்கு ஒரு படி மேல் சென்றனர் என்டியுவின் நன்யாங் சுற்றுப்புற, நீர் ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷேன் ஸ்னைடர் மற்றும் அவரின் குழுவினர்.
கிராமப்புற விலங்குப் பண்ணைகளின் தூசியில் ஆஸ்துமாவுக்கு எதிரான பாதுகாப்பைச் சிறாருக்குத் தரக்கூடிய நான்கு ரசாயனக் கலவைகளை அவர்கள் அடையாளம் கண்டனர். தற்போது ஆஸ்துமா, ஒவ்வாமை தொடர்பான மருந்தைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.