தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதை வழியாக (விடிஎல்) சிங்கப்பூர் வருவோருக்கு உரிய பரிசோதனை ஏற்பாடுகள் மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட அந்த ஏற்பாடு, முதன் முதலாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நான்கு வார காலத்திற்கு நடப்புக்கு வந்தது.
அது, வெளிநாடுகளிலிருந்து விடிஎல் வழி வருவோருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதைக் கண்டறிவதில் உதவி இருக்கிறது.
அதனால் தொற்று குறைந்துள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 912 பேருக்கு ஓமிக்ரான் உறுதியானது.
அவர்களில் 685 பேருக்குத் தொற்று இருந்தது என்பது, விடிஎல் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பரிசோதனை ஏற்பாடு மூலம் தெரியவந்தது.
ஆகையால், இந்த ஏற்பாடு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் சூழ்நிலை எப்படி பரிணமிக்கிறது என்பது பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
மேம்படுத்தப்பட்ட பரிசோதனை ஏற்பாட்டின்படி, விடிஎல் மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் ஏழு நாட்கள் அன்றாடம் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
விடிஎல் விமான வழி வருவோர் தரை இறங்கியதும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
விடிஎல் தரை வழி வருவோர் அதிகாரிகளின் கண்காணிப்புடன்கூடிய ஏஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும். 2வது, 4வது, 5வது, 6வது நாள்களில் அவர்கள் தங்கள் தங்குமிடத்தில் சுயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பயணிகள் 3வது, 7வது நாள்களில் பரிசோதனை நிலையத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையில் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.