அதிகரிக்கும் கொவிட்-19 நோயாளிகளைச் சமாளிக்கும் அளவுக்கு சிங்கப்பூரில் மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 7 விழுக்காடு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சிங்கப்பூரின் மருத்துவ சேவைத்துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கொவிட்-19க்கான அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பொது மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் பெரியோர், குழந்தைகளுக்காக 1,200க்கும் மேற்பட்ட படுக்கைகள் தற்போது தயார்நிலையில் இருப்பதாகச் சொன்னார்.
மொத்த படுக்கைகளில் 28 விழுக்காட்டை தற்போது பெரியோர் பயன்படுத்தி வருவதாகவும் எல்லா வகையான தீவிர சிகிச்சை நோயாளிகளும் பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு
மதிக்கப்பட்டு இருக்கும் விகிதம் 44 விழுக்காட்டுக்கும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
அவசரமற்ற நிலைகளில் இருந்த நோயாளிகளின் பொதுவான சிகிச்சையும் அறுவை சிகிச்சையும் கடந்த மூன்று மாதங்கள் தள்ளிப்போடப்பட்டு உள்ளதாகவும் அவர்களைக் கவனிக்கும் பணி தற்போது தொடங்கி இருப்பதாகவும் பேராசிரியர் மாக் கூறினார்.
இதற்கு முன்னர் கொவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட சில படுக்கைகளை கொவிட்-19 அல்லாத நோயாளிகள் பயன்படுத்தும் விதமாக மாற்றியமைத்துக் ெகாள்ள மருத்துவமனைகள் அனு மதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், புதிய வகை ஓமிக்ரான் தொற்றால் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் தனிமை உத்தரவுக்கான படுக்கைகளையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளையும் அளவுக்கு அதிகமாக அவ்வாறு மாற்றிவிடாதவாறு கவனமுடன் செயல்படுமாறு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.