வாடகை கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் காருக்குள் மாட்டியநிலையில் மாண்டார். புளோக் 42 கேஷியா கிரெசென்ட் திறந்தவெளி கார்நிறுத்தத்தில் நேற்று பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பிற்பகல் 3 மணியளவில் கார்நிறுத்தத்தில் புகை எழும்பியதைக் கண்டு தாமும் தமது கணவரும் புளோக்கிலிருந்து கீழிறங்கிச் சென்று பார்த்தபோது வெள்ளைநிற மஸ்டா 3 கார் இன்னொரு காருடன் மோதிய நிலையில் நின்றதைக் கண்டதாக திருவாட்டி டெர், 47, என்னும் குடியிருப்பாளர் கூறினார். காரின் முன்பகுதி நொறுங்கி காரினுள் புகை மண்டியிருந்ததாகக் கூறிய அவர், அப்போது வரை தீப்பிடிக்கவில்லை என்றார்.
காரின் அருகே சென்று உள்ளே யாரும் இருக்கிறார்களா என்று அறிய காரின் கதவைத் தட்டியபோது உள்ளிருந்து யாரோ அசைவது தென்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தாரை உதவிக்கு அழைக்க தாம் ஓடியதாக அவர் சொன்னார்.
வில்கின்சன் டான், 47, என்னும் மற்றொரு குடியிருப்பாளர், பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறினார்.
தீயணைப்பாளர்கள் வரும் வரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை தீ எரிந்தது. பிற்பகல் 3.40 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இதற்கிடையே, முப்பதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் வாடகைக்கு காரை எடுத்துச் சென்றதாக வாடகை கார் நிறுவனம் கூறியது.
கேலாங் அக்கம்பக்க காவல்நிலையத்திற்குப் பின்னால் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. (படத்தில்) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருடன் காவல்துறை அதிகாரிகள் சிலரும் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஓட்டுநரை வெளியில் இழுக்க ஓர் அதிகாரி முயன்றும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று வில்கின்சன் டான் கூறினார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்